ஜெயலலிதாவிடம் இத்தனை காலமாக எத்தனை கேள்வி கேட்டிருப்பார் விஜயகாந்த்...?
சென்னை: செய்தியாளர்கள் ஏன் ஜெயலலிதாவிடம் கேள்வியே கேட்பதில்லை. இதுதான் விஜயகாந்த் எப்போது செய்தியாளர்களைச் சந்தித்தாலும் கேட்கும் ஒரே கேள்வி. ஆனால் உண்மையில் எல்லோரையும் விட, ஜெயலலிதாவை நிற்க வைத்து கேள்வி கேட்கும் அதிகாரம் விஜயகாந்த்துக்குத்தான் உள்ளது. காரணம் இவர்தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர். திமுகவுக்கு கூட மக்கள் அந்த அதிகாரத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் அந்த அதிகாரத்தை எத்தனை முறை பயன்படுத்தியிருப்பார் விஜயகாந்த்?
கூட்டணியே கிடையாது, ஊழலை முற்றாக ஒழிப்பேன், அதிமுக, திமுக இரண்டுமே தமிழகத்தை அழித்து விட்டன, மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று விஜயகாந்த் ஆரம்பத்தில் கூறியபோது ஆஹா... நல்லதொரு மாற்றம் வரப் போகிறது என்றுதான் அத்தனை பேருமே நினைத்தனர். நடுத்தர வர்க்கத்தினர், அரசு ஊழியர்கள் என பல தரப்பிலும் விஜயகாந்த்துக்கு தனி கெளரவம் கிடைத்தது.

ஆனால் தனது செயல்களால் அத்தனையையும் தூக்கி போட்டு உடைத்து விட்டார் விஜயகாந்த் என்றுதான் சொல்ல வேண்டும். சாதாரண அரசியல்வாதிகளை விட தான் மிகவும் சராசரியான அரசியல்வாதி என்பதை அவரே காட்டி விட்டார். முதலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். இப்போது யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று பேரம் நடக்கிறது.
அவர் என்று அதிமுகவுடன் கூட்டணி வைத்தாரோ அன்றே அவரது வீழ்ச்சி தொடங்க விட்டது. அதை அவர் இன்னும் உணரவில்லை. சுற்றியிருப்பவர்களும் அவரை உணர விடாமல் உசுப்பேற்றி உசுப்பேற்றி மட்டுமே வருகின்றனர்.
அது அவரது அரசியல்.. அது நமக்குத் தேவையில்லை. ஆனால் செய்தியாளர்களிடம் எப்போது பார்த்தாலும் கேட்கிறாரே, இதைப் போய் ஜெயலலிதாவிடம் கேப்பியா.. ஏன் ஜெயலலிதாவிடம் போய்க் கேளேன் என்று.. உண்மையில் இவரிடம் இருந்த அதிகாரத்தை அவர் எத்தனை முறை பயன்படுத்தியிருப்பார்?
- கடந்த நான்கரை வருடங்களில் இவர் எத்தனை முறை சட்டசபையில் ஜெயலலிதாவிடம் நேருக்கு நேர் கேள்விகள் கேட்டிருப்பார்.?
- நாக்கைத் துருத்தி கையை உயர்த்தி சண்டை போட்டு வெளியே வந்த பிறகு ஒருமுறை கூட சட்டசபைக்குப் போகாதது ஏன்?
- சட்டசபைக்குப் போனால் மக்கள் பிரச்சினைகளுக்காக பல கேள்விகளை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமே.. அதை ஏன் செய்யவில்லை விஜயகாந்த்.?
- மக்கள் பிரச்சினைகளுக்காக எத்தனை முறை இவர் சட்டசபையில் சண்டை போட்டிருப்பார்?
- மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க எத்தனை முறை முதல்வரை நேரில் போய்ப் பார்த்து முறையிட்டிருப்பார்?
- ஏன் மக்கள் பிரச்சினையைத் தீர்க்கவில்ல என்று ஒரு எதிர்க்கட்சித் தலைவராக ஏன் ஜெயலலிதாவிடம் இவர் சண்டை போடவில்லை?
- மக்கள் பிரச்சினைகளுக்காக எத்தனை முறை இவர் போராட்டங்கள் நடத்தியுள்ளார்.?
- மக்களின் முக்கியப் பிரச்சினைகளில் இவர் எத்தனை முறை கருத்துக் கூறியிருப்பார்?
- கூடங்குளம் பிரச்சினை குறித்த இவரது நிலைப்பாடு இதுவரை என்ன என்றே தெரியவில்லையே?
- செம்மரக் கடத்தல்காரர்கள் என்று கூறி 20 தமிழர்களை ஆந்திர போலீஸார் கொன்று குவித்ததற்காக இவர் என்ன எதிர்ப்பு தெரிவித்தார்?
- தமிழக மீனவர்கள் பிரச்சினைக்காக இவர் எடுத்த நடவடிக்கைகள்தான் என்ன?
- கேப்டன் டிவியிலும் செய்தி வாசிக்கிறார்கள்.. அதிலும் செய்தி்யாளர்கள் உள்ளனர்.. அவர்கள் எத்தனை முறை ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்டிருப்பார்கள்?
- கேப்டன் டிவி செய்தியாளர்கள் ஜெயலலிதாவைச் சந்திக்க எப்போதாவது முயற்சித்தார்களா?
- ஏன் முயற்சிக்கவில்லை, ஏன் கேள்வி கேக்கலைன்னு என்றாவது கேப்டன் டிவி செய்தியாளர்கள் முகத்தில் அவர் உமிழ்ந்துள்ளாரா?
எதிர்க்கட்சித் தலைவராக அண்ணா இருந்துள்ளார். கருணாநிதி இருந்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் போன்ற மாண்புமிகு தலைவர்கள் நடமாடிய மாநிலம் இது.. மதிப்புக்குரிய தலைவர்கள் உலவிய சட்டசபை இது.. கண்ணியத்துக்குரிய தலைவர்கள் வாழ்ந்த பூமி இது.. ஆனால் விஜயகாந்த் இந்த "கேட்டகிரி" எதிலாவது இருக்கிறாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.. ?












Click it and Unblock the Notifications