கொந்தளித்த மாற்றுத் திறனாளிகள்.. பணிந்தார் ராதாரவி.. மன்னிப்பும் கேட்டார்
தங்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய நடிகர் ராதாரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் ராதா ரவி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
சென்னை: அவமானப்படுத்தும் வகையில் இழிவாக பேசிய ராதாரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது வீடு முன்பு ஆர்பாட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர். தன்னுடைய பேச்சு மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஸ்டாலின் பிறந்தநாளன்று மேடையில் பேசிய ராதாரவி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும், பாமக நிறுவனர் ராமதாசையும் கிண்டல் செய்வது போல பேசினார். அப்போது அவர் மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் அவரது தாய்மார்களை பழித்து பேசினார்.

ரசித்த திமுகவினர்
ராதாரவி பேசிக் கொண்டு இருக்கும்போது இவரது பேச்சை அங்கிருந்த கட்சி தொண்டர்களும் கைதட்டி ரசித்தது, மிகவும் அறுவெறுக்கத்தக்கதாக இருந்தது என்று தற்போது கண்டனக் குரல் எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தபோதும் ராதாரவி வருத்தம் தெரிவித்ததாகத் தெரியவில்லை.

மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டம்
இதனையடுத்து ராதாரவி வீட்டு முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம். டிசம்பர் 3 இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள், எங்களை இவ்வாறு பேச ராதா ரவிக்கு கேவலமாக இல்லையா?'' என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து ராதாரவி வீடு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ராதாரவி விளக்கம்
தன்னுடைய மேடைப்பேச்சு கருத்து கூறியுள்ள ராதாரவி, நான் மாற்று திறனாளிகளை புண்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை. நான் சார்ந்து இருக்கும் லயன்சு சங்கம் மூலம் அவர்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்து வருபவன். மாற்று திறனாளிகள் பள்ளிக்கு என் தந்தை பெயரில் வகுப்பறையே கட்டி கொடுத்தவன் என்றார். எந்த காலத்திலும் அந்த சகோதரர்களை குறைத்து மதிப்பிடும் எண்ணம் என்னிடம் வராது. இப்போது கூட அந்த அமைப்பினரிடம் பேசும் போது நானும் உங்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து சேவை செய்ய தயாராக இருப்பதாக கூறினேன்.

வருத்தப்படுகிறேன்
தங்க சாலை கூட்டத்தில் நான் பேசிய கருத்துக்கள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி கனிமொழி எம்.பி.யிடமும் விளக்கிச் சொன்னேன். நான் பேசியது அவர்களின் மனம் வருந்தும்படி இருந்தால் அதற்காக நான் மன வருத்தப்படுகிறேன் என கூறியுள்ளார் ராதாரவி.












Click it and Unblock the Notifications