செங்கல்பட்டு மகாலட்சுமி நகரில் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்பதில் சிக்கல்!
செங்கல்பட்டு: வெள்ளநீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு மகாலட்சுமி நகரில் சிக்கியுள்ள 50-க்கும் மேற்பட்டோரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தீவிரமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது வரையி்ல் பேய் மழைக்கு 113 பேர் பலியாகி உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் மழையால் நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஜெ.சி.கே.நகர், குறிஞ்சி தெரு, தென்றல் தெரு, தாழம்பூர் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் 500 வீடுகளை வெள்ளத்தில் தத்தளித்து வந்தன.
தொடர்ந்து கொட்டித் தீர்த்துவரும் கனமழையின் காரணமாக செங்கல்பட்டு மகாலட்சுமி நகரில் 250 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து மீட்புக் குழுவினர் படகுகள் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 213 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனிடையே வெள்ளநீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் படகுகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மேலும் 50 க்கும் அதிகமானோரை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.