மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்? உயரதிகாரிகள் மீது புகாரால் டிஐஜி பரிந்துரை என தகவல்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார் சுந்தரேசன்.
தனது அலுவலக வாகனம் பறிக்கப்பட்டதாக கூறி நேற்று அலுவலகத்திற்கு நடந்து சென்றார் டிஎஸ்பி சுந்தரேசன். காவல் உயரதிகாரிகள் தன்னை டார்ச்சர் செய்வதாக நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்து டிஎஸ்பி சுந்தரேசன் பேசி இருந்தார்.

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்து நேற்று அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தன்னை மேலதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாக்குகின்றனர் என கூறிய டிஎஸ்பி சுந்தரேசன், "வளைந்து செல்லாவிட்டால் ஒடுக்கப்படுவீர்கள்" என மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தன்னை மிரட்டியதாக தெரிவித்தார்.
மேலும், தனது காரை விஐபி பாதுகாப்பு பணிக்கு மாற்றி விட்டு பழுதடைந்த வாகனத்தை கொடுத்ததாகவும், அதனால் அலுவலகத்துக்கு நடந்து சென்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், டிஎஸ்பி சுந்தரேசன், காவல்துறை அலுவலகத்துக்கு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சுந்தரேசன், "லஞ்சம், ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு வசூல் செய்யாத நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பழிவாங்கப்படுவார்கள். உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மூலம் அதிகாரிகள் பணம் வசூலிக்கின்றனர். அதிகாரிகள் செய்யும் தவறுக்கு கீழ்மட்ட காவலர்கள் பாதிக்கப்படுகின்றனர். உளவு பிரிவு ஐஜி செந்தில்வேல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த மாவட்ட எஸ்பி ஸ்டாலின், "டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டன. அவர் மீது என்ன விதமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது விசாரணைக்கு பின்னே தெரியவரும். லஞ்சம், ஊழல் எதுவும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இல்லை" எனத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து டிஎஸ்பி சுந்தரேசனின் சர்வீஸ் ரெக்கார்டில் உள்ள முந்தைய ஆண்டுகளின் தண்டனை விவரம் குறித்த தகவல்கள் காவல்துறை அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இன்று மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் பங்கேற்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி ஸ்டாலினும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக், திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications