அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொ.ப.செ.வாகிறார் சசிகலா புஷ்பா?
தினகரன் கட்சியின் கொள்கை பரப்பு செயலராக சசிகலா புஷ்பா விரைவில் நியமிக்கப்பட இருக்கிறாராம்.
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக சசிகலா புஷ்பா விரைவில் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சசிகலாவைப் பார்த்துவிட்டு வாருங்கள்...பதவி கொடுக்கிறேன்' என சசிகலா புஷ்பாவிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டி.டி.வி.தினகரன். ' சசிகலாவைப் பொதுச் செயலாளர் ஆகவிடாமல் தடுத்தது புஷ்பாதான். எனவே, சசிகலாவிடம் நிலைமையை விளக்குவதுதான் சரியானது. அந்த அடிப்படையில்தான் தினகரன் இவ்வாறு கூறியிருக்கிறார்' என்கின்றனர் அ.ம.மு.க வட்டரத்தில்.
முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.கவின் தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. இதன்பின்பு நடந்த உள்கட்சி மோதலால், அவருடைய பதவி கேள்விக்குறியானது.
கட்சியையும் சின்னத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கே ஒதுக்கியது தேர்தல் ஆணையம். 'அ.தி.மு.க தொண்டர்கள் ஒன்றுசேர்ந்துதான் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும்' என்ற விதியைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் வரையில் சென்று போராடினார் சசிகலா புஷ்பா.
அதன் விளைவாகவே சசிகலாவால் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஆக முடியவில்லை. இதன்பிறகு ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகளோடு ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, தினகரன் அணிக்குத் தாவினார் சசிகலா புஷ்பா. இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியைக் கேட்டு டி.டி.வி.தினகரனை அணுகினார் சசிகலா புஷ்பா.
அவரோ, ' முந்தைய காலகட்டங்களில் சில கசப்புணர்வுகள் ஏற்பட்டன. அதைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மட்டுமே பார்ப்போம். உங்களுக்குப் பதவி கொடுப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. பெங்களூரு சென்று சின்னம்மாவும் ஒருமுறை பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்' எனக் கூறியிருக்கிறார்.
" இதை சசிகலா புஷ்பாவும் ஏற்றுக் கொண்டார்" என விவரித்த தினகரன் ஆதரவாளர் ஒருவர், " புஷ்பாவிடம் பல விஷயங்களைக் கோடிட்டுக் காட்டினார் தினகரன். ' இந்த விவகாரத்தில் என்னை (சசிகலா புஷ்பா) சிலர் பயன்படுத்திக் கொண்டார்கள். சின்னம்மாவுக்கு எதிராகச் செயல்படுவது நோக்கமல்ல என்பதையும் சொல்லுங்கள்' என விளக்கியிருக்கிறார். அதேநேரம், தினகரனோடு இருக்கும் சிலருக்கு, குறிப்பாக சமுதாயரீதியாகச் செயல்படும் சிலருக்கு இதில் உடன்பாடில்லை. ' நாம் என்றைக்கோ ஆட்சியில் அமர்ந்து இருக்க வேண்டியது. டெல்லியின் ஆட்டத்துக்கு சசிகலா புஷ்பாவும் துணை போனார். அவருக்குப் பதவி கொடுப்பது நல்லதல்ல' எனவும் கூறியுள்ளனர். இதனை தினகரன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விரைவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக சசிகலா புஷ்பா நியமிக்கப்படலாம்" என்றார் விரிவாக.