தொடரும் தினகரன் அணியின் ’ஸ்லீப்பர் செல் பூச்சாண்டி’-கிளைமாக்ஸ் வருதாம்..சொல்வது தங்க தமிழ்ச்செல்வன்
எடப்பாடி ஆட்சியை தமது ஸ்லீப்பர் செல்கள் கவிழ்த்துவிடும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறது தினகரன் அணி.
சென்னை: தமிழக அரசியல் களத்தில் ஸ்லீப்பர் செல் என்கிற வார்த்தையை உபயோகப்படுத்தி பரபரப்பை கிளப்பியது தினகரன் அணி. ஆனால் ஸ்லீப்பர் செல்கள் நமத்துப் போன புஷ்வானமாகப் போனதாலோ தினகரன் அணியின் வியூகம் எதுவும் எடுபடாமல் போய்விட்டது. ஆனாலும் ஸ்லீப்பர் செல்கள் மீது தினகரன் அணி இன்னமும் அபார நம்பிக்கை வைத்திருக்கிறது.
சேலத்தில் தினகரன் அணியின் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்களது அதிமுக அம்மா கட்சிக்கு பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். எங்கள் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்திருக்கிறோம்.
இதைத் தாக்கல் செய்தது முதல்வர் எடப்பாடியார் உள்ளிட்டோர்தான். பின்னர் திடீரென எடப்பாடி தலைமையில் பொதுக்குழு கூட்டம் போட்டு, 1,118 பேர் அபிடவிட் தாக்கல் செய்து இரட்டை இலையை கேட்கிறார்கள். அதில் 116 பேரின் அபிடவிட் போலியானவை.
இரட்டை இலை சின்னம் குறித்த அடுத்த கட்ட விசாரணை வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது. எங்களுக்கு இரட்டை இலை கிடைக்காமல் போனால் உச்சநீதிமன்றம் போவோம்.
18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் நவம்பர் 2-ந் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும். நிச்சயமாக ஓபிஎஸ் உட்பட 11 பேரின் பதவி பறிபோகும். எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் உட்பட 25 பேர் இன்னமும் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர். விரைவில் க்ளைமாக்ஸ் வரும்.
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.