குடகு மாவட்டத்திற்கு ஷிப்ட்டான தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்.. ரகசிய இடத்தில் தங்க வைப்பு
பெங்களூர்: குடகு மாவட்ட ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரியில் இருந்து மைசூர் சென்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பின்னர் அங்கிருந்து, சுமார் 120 கி.மீ தொலைவிலுள்ள குடகு மாவட்டத்திலுள்ள ரிசார்ட்டுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் எந்த ரிசார்ட்டில் உள்ளனர் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களின் தொலைபேசி எண்களுக்கு நிருபர்கள் போன் செய்தால் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளதாக பதில் கிடைக்கிறது. ஆனால் செல்போன் நிறுவனத்தின் குரல் கன்னட மொழியில் உள்ளது. எனவே அவர்கள் கர்நாடகாவிற்குள்தான் உள்ளனர் என்பது தெரிகிறது.

ரகசியம்
புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்தபோது எம்எல்ஏக்கள் சுதந்திரமாக விடப்பட்டனர். ஊஞ்சல் ஆடுவது, வாக்கிங் செல்வது என மீடியாக்கள் கண்களில் தொடர்ச்சியாக தென்பட்டனர். இஷ்டத்திற்கு பேட்டிகள் கொடுத்தனர். ஆனால் இப்போது ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

கூவத்தூர் நிலை
கூவத்தூரில் உள்ள நிலைதான் இப்போது குடகிலும் காணப்படுகிறது என்பதை ஊர்ஜிதமாகியுள்ளது. ஜக்கையன் எம்எல்ஏ திடீரென எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக கிளம்பிவிட்டார். அதேபோல மேலும் சிலரும் கிளம்பலாம் என்ற எச்சரிக்கையால் இப்படி ரகசியம் காக்கப்படுவதாக தினகரன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்திரிகையாளர்கள் தேடுதல்
சுற்றுலா தலமான குடகிலுள்ள அனைத்து ரிசார்டுகளையும் சல்லடை போட்டு தமிழ் மற்றும் கன்னட பத்திரிகையாளர்கள் தேடி வருகிறார்கள். இன்னும் கூட எம்எல்ஏக்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை. விரைந்து கண்டுபிடித்துவிடுவோம் என களத்திலுள்ள நிருபர்கள் நம்மிடம் நம்பிக்கை தெரிவித்தார்கள்.

போலீசார் குவிப்பு
குடகில் தினகரனின் நண்பருக்கு சொந்தமான ரிசார்டுகள் இருப்பதாகவும் அதில் ஒன்றில்தான் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில ரிசார்டுகளில் மட்டும் அதிகப்படியாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ரிசார்ட்டுகளில்தான் எம்எல்ஏக்கள் இருக்க கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications