பா. வளர்மதியின் இலக்கிய அணிச் செயலாளர் பதவியைப் பறித்தார் தினகரன்!
அதிமுக இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியை நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பதவிகளை பறித்து வருகிறார் டிடிவி தினகரன். தற்போது அதிமுக இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியை நீக்கியுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கடவுளாகவே துதித்தனர் அதிமுகவினர். அதிலும் முன்னாள் அமைச்சர்களாக இருந்த கோகுல இந்திரா, பா.வளர்மதி ஆகியோர் ஜெயலலிதாவிற்காக எதையும் செய்ய தயாராக இருந்தனர்.
எல்லாம் டிசம்பர் 5ஆம் தேதி வரைதான்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் சசிகலாவின் ஆதரவாளராக மாறினார்கள். சின்னம்மா புகழ் பாடினார்கள். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா கடந்த 31ஆம் தேதி பதவியேற்றார்.
அதுவரை அவர் வெளியுலகில் பேசாமல் இருந்ததால் அவரது குரலைக் கேட்க மக்கள் ஆர்வமாக இருந்தனர். அப்போது சசிகலாவின் குரல் சின்னம்மாவின் குரல் இனிமையாக இருக்கும் என புகழ்ந்து தள்ளினார் வளர்மதி

அதிமுகவின் தாய்குலங்கள்
அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த சி.ஆர். சரஸ்வதியும் சசிகலாவிற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கடைசியாக சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் அடித்து சபதம் செய்த போதும் கூட அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்கள் வளர்மதியும், கோகுல இந்திராவும். சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரரஹாரா சிறையில் 3 பேரும் ஒன்றாகப் போய் அவரை சந்தித்துவிட்டு வந்தனர்.

பா. வளர்மதிக்கு பதவி
இலக்கிய அணி செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த பா.வளர்மதி, திடீரென தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார், இதனையடுத்து அவர் குடும்பத்துடன் சசிகலாவை சந்தித்து ஆசி வாங்கிக் கொண்டார்.

தினகரனுக்கு எதிர் அணி
எல்லாம் சசிகலா சிறை செல்லும் வரைதான். சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்படவே, அதிமுகவில் பல அணிகள் பிரிந்தன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவே, பா. வளர்மதி கோகுலா இந்திரா ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சென்றார். ஆனால் சி.ஆர். சரஸ்வதி மட்டும் தினகரன் அணியிலேயே தங்கி விட்டார்.

பதவி நீக்கம்
இந்த நிலையில் தனக்கு எதிர்அணியில் உள்ளவர்களின் கட்சிப்பதவிகளை பறித்து வருகிறார் டிடிவி தினகரன், இன்றைய தினம் பல நிர்வாகிகளின் பதவியை பறித்துள்ளார். முக்கியமாக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியின் இலக்கிய அணி செயலாளர் பதவியை பறித்து உத்தரவிட்டுள்ளார்.

நிர்வாகிகள் பதவி பறிப்பு
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து சைதை துரைசாமி, மைதிலி, திருநாவுக்கரசு, ஸ்ரீரங்கம் எஸ்.வளர்மதி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக மாணவர் அணி செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி. நீக்கப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலர் பொறுப்பிலிருந்து முருகுமாறன் எம்.எல்.ஏ. ஆகியோரை நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications