என்ன நடந்தாலும் சந்திக்க தயார்; பயப்படப் போவதில்லை: தினகரன் ஆவேசம் !
வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள ஆவணங்களில் எந்தவித நம்பகத்தன்மையும் இல்லை என அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பொதுவாழ்வில் எதிரிகள், சூழ்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதை கண்டு அச்சப்போவதில்லை. என்ன நடந்தாலும் சந்திக்க தயார் என்று ஆர்.கே.நகர் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனை வெற்றி பெற வைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றி பல்வேறு திடுக்கிடும் ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன.
இந்தநிலையில், ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அவர், வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லை. தேர்தலை தள்ளி வைக்கும் வேலை தான் தற்போது நடந்து வருகிறது என்று கூறினார்.
மேலும் பொதுவாழ்வில் எதிரிகள், சூழ்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதை கண்டு நாங்கள் பயப்படப்போவதில்லை. என்ன நடந்தாலும் சந்திக்க தயார். எப்போது தேர்தல் நடந்தாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். நாங்கள் ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்றவர்கள் என்பதால் எங்களுக்கு அச்சமில்லை என்று கூறியுள்ளார்.