அங்கே எட்டப்பர்கள் அதிகம் இருக்கிறார்கள்... நாங்களே உண்மையான அதிமுக - தினகரன்
கட்சியும், தொண்டர்களும் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் வசம் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Recommended Video
திருப்பூர்: இரட்டை இலை தீர்ப்பின் பின்னணியில் சதி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் எட்டப்பன் நாட்டை காட்டிக்கொடுத்தார். அதேபோல சில எட்டப்பன்கள் அங்கு இருக்கிறார்கள் என்றும் கூறினார்.
ஜெயலலிதாவின் வாக்கு வங்கி எப்போதும் எங்களுக்கே கிடைக்கும் என்று தினகரன் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிடிவி தினகரன், பாஜகவின் சதிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உடந்தையாக இருக்கிறார்கள் என்றார்.
ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை
கட்சியை காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது, ஆனால் ஆட்சியாளர்களுக்கு கட்சி குறித்து கவலையில்லை. சசிகலா தலைமையில் கட்சி இயங்கினால் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும்.
தேர்தல் ஆணையம் நடுநிலையில்லை
122 எம்எல்ஏக்கள் இருந்த போது எங்களுக்கு சின்னம் தரவில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது சின்னத்தை முடக்கினர். நேற்று சின்னத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டு இன்று தேர்தலை அறிவிக்கின்றனர். இடைத்தேர்தலின்போது சின்னத்தை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?.
இறுதிச்சுற்று
முதல் சுற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், இறுதி சுற்றில் வெற்றி எங்களுக்கே கிடைக்கும். ஏனெனில் கட்சித் தொண்டர்கள் பன்னீர்செல்வம் மீதும் எடப்பாடி பழனிசாமி மீதும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
ஆட்சி கலையும்
கட்சியும் தொண்டர்களும் அவர்களிடம் கிடையாது. எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைக்க பொதுமக்கள் விரும்புவதாகவும், மக்கள் விரோத எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் தினகரன் கூறியுள்ளார்.