முதல்வரை மாத்துங்க, முடியலையா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்க.. தங்கதமிழ் செல்வன்
எங்களின் ஒரே முடிவு முதல்வரை மாற்றவேண்டும் என்பதுதான். முதல்வரை மாற்றாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தட்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: எங்களின் ஒரே கோரிக்கை முதல்வரை மாற்ற வேண்டும் என்பதுதான் மாற்றாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தட்டும் என்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் இணைந்த பின்னர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் வழங்கிய அவர்கள், முதல்வர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரையும் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார்.இதைத்தொடந்து, கடந்த வாரம் சபாநாயகர் தனபால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிருந்தார்.
தங்க தமிழ் செல்வன் விளக்கம்
ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தனபால் கூறியிருந்தார். இதனிடையே, நேற்று முன் தினம் , தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் தலைமை செயலகம் வந்து விளக்கம் அளித்தனர்.
மீண்டும் நோட்டீஸ்
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கு, சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முன்பு அளித்த விளக்கத்தை, இடைக்காலப் பதிவாக மட்டுமே கருத முடியும் என்று தனபால் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பேட்டி
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன், சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ்கு முழு விளக்கம் அளிக்கப்படும் என்றார்.
40 எம்எல்ஏக்கள்
இப்போது 19 எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் இருக்கிறோம். சுந்தர்ராஜன் மட்டுமே சென்று விட்டார். இப்போது 19 பேர் இங்கே இருக்கிறோம். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்கள் இருக்கிறோம். அவர்கள் எல்லோருமே கடிதம் தர இருக்கிறோம்.
9 பேருக்காக நம்பிக்கை வாக்கெடுப்பு
பிப்ரவரி மாதம் 122 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்தோம். 9 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்துள்ள ஓ.பன்னீர் செல்வம் கேட்டார் என்பதற்காக அப்போது ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால் இன்று 19 பேர் நாங்கள் கடிதம் கொடுத்தும் ஆளுநர் சட்டசபையை கூட்ட மறுக்கிறார்.
Recommended Video
ஜனாதிபதியை சந்திப்போம்
எங்களுக்குத் தேவை ஆட்சி கலைப்பு அல்ல. முதல்வர் மாற்றம் மட்டுமே. முதல்வரை மாற்றினால் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லை. அப்படி மாற்றாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு கேட்பதை தவிர வேறு வழியில்லை. ஆளுநர் எங்களை அழைக்காவிட்டால் குடியரசு தலைவரை சந்திப்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார். முதல்வரை மாற்ற வேண்டும் என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.