கம்பீரமும் இல்லை, சுயமரியாதையும் இல்லை.. இதுதான் அதிமுக அமைச்ச்ரகள்.. திண்டுக்கல் லியோனி
தூத்துக்குடி: அதிமுக அமைச்சர்களிடம் அந்தப் பதவிக்குரிய கம்பீரமும், சுயமரியாதையும் அவர்களிடம் இல்லை என்று தாக்கியுள்ளார் திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி.
தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் 93வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது.
அதில் சிறப்பு பேச்சாளராக திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசினார். லியோனியின் பேச்சிலிருந்து...
சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களோடு சேர்ந்துகொண்டு நடிகர் கருணாஸ் மற்றும் தனியரசு போன்றவர்களும் தமது பங்கிற்கு முதல்வரை துதிபாடியே நேரத்தை வீணடித்து வருகின்றனர். தமிழக அரசின் அவலங்களை தட்டிக்கேட்டதால் தூக்கி வெளியே போட்டாலும் திமுக எதிர்கட்சி தலைவரான எங்கள் தலைவர் ஸ்டாலினின் பெருமையை யாராலும் குறைக்கவே முடியாது.
சட்டசபை என்பது முதல்வரின் புகழ்பாடும் மன்றமாகவே இருந்து வருகிறது, அம்மா உப்பு, அம்மா உணவகம் என்ற ரீதியில் அம்மாவை புகழ்ந்து பஜனை பாடும் மன்றமாகவே இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதற்கு பதிலாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொன்னது போன்று சட்டசபை கூட்டத்தை இனிமேல் போயஸ்கார்டன் இல்லத்து சமையலறையிலேயே நடத்தி விடலாம்.
நாடாளுமன்றத்தில் தனது கட்சி தலைவரை பற்றி புகார் சொன்னதால் இதுவரை நல்லவராக இருந்த அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா இப்போது அதிமுகவினருக்கு கெட்டவராகி விட்டார். இதனால் அவர் மீது வேண்டுமென்றே பொய் வழக்குகள் காவல்துறையால் போடப்பட்டு வருகிறது. இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லியே ஆகவேண்டும்.
தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் சண்முகநாதனின் மாவட்ட செயலாளர் பதவி திடீரென்று பறிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவிக்கு இவர் தகுதியானவர் என்றால் மாவட்ட செயலாளர் பதவிக்கு தகுதியற்றவரா? அதிமுகவில் என்னதான் நடக்கிறது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு அமைச்சரும் அமாவாசை வந்தால் நமது பதவி இருக்குமா? அல்லது பறிபோய் விடுமா? என்ற பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
ஆளும்கட்சியாக இருந்தாலும் அதிமுக அமைச்சர்கள் கம்பீரமும், கவுரவமும், சுயமரியாதையும் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் என அனைவருக்கும் உரிய சுயமரியாதையை வழங்கிடும் இயக்கமாக திமுக தான் இருக்கிறது. தமிழகத்தை தலைமை தாங்கி வழிநடத்தி செல்லும் தகுதி திமுக தலைவர் கருணாநிதிக்கும், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும் தான் இருக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களை சந்திக்க இயலாத முதல்வராகவே இருக்கிறார். காவலர் மானிய கோரிக்கையின்போது திமுகவினர் தமிழகத்தில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து கேள்வி எழுப்புவார்களே? என்ற பயத்தில் தான் திமுகவினரை சபையில் பங்கேற்க முடியாத வகையில் இடைநீக்கம் செய்துள்ளனர். இதையெல்லாம் மக்கள் நன்கு அறிந்தவர்களாவே இருக்கின்றனர்.
தப்பு செய்தவர்கள் தண்டனையில் இருந்து ஒருபோதும் தப்பவே முடியாது, ஒரு குமாரசாமி தப்பு செய்யலாம், அதற்காக எல்லா குமாரசாமியும் தப்பு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. தமிழக முதல்வரின் சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைப்பது உறுதி. தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத இந்த அரசை தட்டிக்கேட்கும் ஆயுதமாக மக்கள் கையில் உள்ளாட்சி தேர்தல் கிடைத்துள்ளது. இந்த ஆயுத்தை கொண்டு மக்கள் அதிமுகவிற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் மக்களின் நல்லாதரவுடன் திமுக அமோக வெற்றி பெறும் என்றார் லியோனி.