122 எம்எல்ஏக்கள் இருக்கோம்... ஸ்டாலினால் ஒன்னும் செய்ய முடியாது - திண்டுக்கல் சீனிவாசன்
ஸ்டாலினால் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர முடியாது... அவரால் ஒன்னும் பண்ண முடியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை: எங்களிடம் 122 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எங்களை எதுவும் செய்ய முடியாது, மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரை ரிங்ரோட்டில் உள்ள அம்மா திடலில் வரும் 5ஆம் தேதி அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் இளைஞர் திருவிழா நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நடும்விழா இன்று காலை நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மிகவும் இணக்கமாக இருக்கிறோம். விரைவில் இணைப்பு நல்லபடியாக முடியும். எங்களிடம் எந்த நிபந்தனைகளும் இல்லை. அவர்களின் நிபந்தனைகளை நிறைவேற்றி உள்ளோம்.
இரட்டை இலையை மீட்கவே பாடுபட்டு வருகிறோம். ஆர்.கே. நகர் தேர்தலின் போதே எங்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கி இருக்க வேண்டும். ஏன் வழங்கவில்லை என்று தெரியவில்லை.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பொய் பிரசாரம் செய்து வருகிறார். எங்களிடம் 122 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எனவே அ.தி.முக.வை அழித்துவிட்டு மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முடியாது. அப்படி அவர் நினைத்தால் அது பகல் கனவாகத்தான் இருக்கும்.