“சூடான இரத்தத்தின் கதையை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!”.. நாங்குநேரி சம்பவம்.. கலங்கிய மாரி செல்வராஜ்
நாங்குநேரி: திருநெல்வேலி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பயிலும் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவனை சக மாணவர்கள் கொடூரமாக வெட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த அம்பிகா-முனியாண்டி தம்பதியினரின் மகனான சின்னதுரை வள்ளியூர் கண்கார்டியா பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சின்னதுரையுடன் நாங்குநேரி மற்ற சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள். இவர்கள் பெருந்தெரு மாணவர்களிடம் தங்களது புத்தகப் பைகளை சுமக்க வைப்பதும், அவர்களிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. சில நேரங்களில் ஓட்டல்களில் சாப்பிட்டுவிட்டு தலித் சமூத்தை சேர்ந்த மாணவர்களை பணம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

இந்நிலையில் இதற்கெல்லாம் உச்சமாக தலித் சமூகத்தை சேர்ந்த சின்னதுரையை வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வெட்டியுள்ளனர். இது குறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சின்னதுரை தொடர்ந்து மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்களால் துன்புறுத்தலை எதிர்கொண்டிருக்கிறார். சில நேரங்களில் அவர் மீது பாலியல் துன்புறுத்தலும் நடைபெற்றிருக்கிறது.
ஒரு கட்டத்தில் பள்ளிக்கு செல்வதையே சின்னதுரை வெறுத்திருக்கிறார். இது தொடர்பாக விசாரித்த அவரது தாய் உண்மை அறிந்து பள்ளி தலைமையாசிரியரிடம் நியாயம் கேட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஈடுபட்ட சக மாணவர்களை தலைமை ஆசிரியர் அழைத்து கண்டித்த நிலையில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இரவோடு இரவாக சின்னதுரை வீட்டில் புகுந்த சக மாணவர்கள் சின்னதுரையை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை தடுக்க வந்த அவரது தங்கையையும் வெட்டியுள்ளனர்.
சம்பவத்தை தூரத்திலிருந்து பார்த்த இவர்களது தாத்தா தடுக்க முயற்சிக்கையில் மாணவர்களால் தள்ளி விடப்பட்டிருக்கிறார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். தற்போது மாணவன் சின்னதுரை மற்றும் அவரின் சகோதரி இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். உயிரிழந்த தாத்தா உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
நெல்லை - தென்காசி உள்ளடங்கிய ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் உடற்கல்வி ஆசிரியர் தலைமையின் கீழ் மாணவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கல்வி நிலையங்களில் நடக்கும் மாணவப் பிரச்சினைகளை கண்காணித்து அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அந்த கண்காணிப்பு குழுவுக்கு இருக்கிறது; இந்த விவகாரத்தில் சரியாக செயல்படாத கண்காணிப்பு குழுவை விசாரிக்க வேண்டும் எனவும் சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. "கடந்த இரண்டு நாட்களாக இந்த படிக்கட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தற்போதுவரை இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 6 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications