ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது- கவுதமன்
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என திரைப்பட இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட பங்கெடுத்துள்ளனர்.
அலங்காநல்லூரில் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்து வரும் நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சுப்பிரமணியசாமியின் மிரட்டலுக்கு பயந்தே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் என இயக்குனர் கவுதமன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என கவுதமன் கூறியுள்ளார். போராட்டக்காரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது டி.ஜி.பி.யிடம் புகார் தெரிவிக்கவேண்டும். மேலும் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் எனவும் கவுதமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தை பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அவனியாபுரம் சென்றிருந்த இயக்குநர் கவுதமன் மீதும் போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications