தினகரனால் எதுவும் செய்ய முடியலையே- நம்ம பதவி போனதுதான் மிச்சம்- விரக்தியில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள்
ஆட்சியை கவிழ்ப்பேன் என கூறிவந்த தினகரனால் எதுவும் செய்ய முடியாமல் போனதால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் புலம்பி வருகின்றனராம்.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் சுயேச்சை எம்.எல்.ஏ. தினகரன் தனிக்கட்சி தொடங்கடும் சூழ்நிலை உருவாகிவிட்டது..அப்படி உருவானால் ஆட்சிக்கு பிரச்சனையே இல்லை என காத்திருக்கிறார்களாம் முதல்வர் எடப்பாடியார் ஆதரவாளர்கள். அதே நேரத்தில் தினகரன் மட்டும் எம்.எல்.ஏ.வாகிவிட்ட நிலையில் தங்களது பதவி பறிபோய்விட்டதே என தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் புலம்பி வருகின்றனராம்.
அ.தி.மு.க அரசுக்கு எதிராக தினகரனால் எதுவும் செய்ய முடியாத சூழல் உருவாகிவிட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஆட்சியே கையில் வந்துவிடுவதைப் போலப் பேசினார் தினகரன்.
அவரைத் திட்டமிட்டு ஒதுக்கிவிட்டார் முதல்வர். உள்ளாட்சி தேர்தலுக்குள் அவர் தனிக்கட்சி தொடங்கினால்தான் பிழைக்க முடியும்' என்கின்றனர் அமைச்சர்கள்.
கொளுத்திப் போடும் தினகரன்
சட்டமன்றத்தில் தனி நபராக அமர்ந்து சபை நடவடிக்கைகளைக் கவனித்து வந்தார் தினகரன். அவருக்குப் பேச வாய்ப்பளிக்காததால், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பேரவைக்கு வெளியே பேசும்போதும், சட்டசபைக்குள் நுழையும்போது இரண்டு எம்.எல்.ஏக்கள் என்னைப் பார்த்ததும் பதறிப் போய் ஓடினார்கள். யாரும் பார்க்காத நேரத்தில், ஒரு அமைச்சர் எனக்கு வணக்கம் வைத்தார்' எனக் கொளுத்திப் போட்டார்.
வகுப்பெடுத்த அதிமுக
இப்படிச் செய்வார் என்பதற்காகத்தான், சபையில் செயல்பட வேண்டிய முறைகளைப் பற்றி விரிவாக வகுப்பெடுத்தனர் அமைச்சர்கள். அதையே எம்.எல்.ஏக்கள் கடைபிடிப்பதால் எந்தவித கூச்சலும் இல்லாமல் சபை நகர்ந்து கொண்டிருக்கிறது என விவரித்த ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், தினகரன் வெற்றி பெற்று 17 நாட்கள் ஆகிவிட்டன. இத்தனை நாட்களில் அவர் பேசிக் கொண்டு மட்டும்தான் இருக்கிறார். அவரால் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வர முடியவில்லை.
அதிருப்தியில் மாஜி எம்.எல்.ஏக்கள்
தினகரன் ஒரு நீர்க்குமிழி, மாயமான்' என பன்னீர்செல்வம் கூறிய வார்த்தைகளின்படிதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு எம்.எல்.ஏகூட இதுவரையில் அவரிடம் சென்று பேசவில்லை. இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்றுதான் எம்.எல்.ஏக்கள் விரும்புகிறார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க நடவடிக்கைக்குப் பிறகு மற்ற எம்.எல்.ஏக்களின் நடவடிக்கைகளிலும் மாற்றம் வந்துவிட்டது.
தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் அதிருப்தி
தினகரனை ஆதரித்துக் கொண்டிருக்கும் தகுதிநீக்க எம்.எல்.ஏக்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். எடப்பாடியார் பக்கம் போய் இருந்தால் பதவியாவது மிஞ்சியிருக்கும். கொஞ்சம் அனுசரித்து நடந்திருந்தால், வேண்டியவற்றை சாதித்திருக்கலாம். நம்மை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, சட்டசபைக்குள் தினகரன் போய் வருகிறார்' என சில அமைச்சர்களிடம் ஆதங்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியைக் கவிழ்த்து தினகரன் எதையாவது செய்வார் என நம்பி அவர்கள் ஏமாந்துவிட்டனர்.
உள்ளாட்சி தேர்தல் வியூகம்
சட்டசபைக் கூட்டத் தொடரில் தினகரனால் எதுவும் செய்ய முடியாது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் புரிந்து வைத்துள்ளனர். எனவேதான், வேறு வழியில்லாமல் ' அந்த அமைச்சர் என்னைப் பார்த்து சிரித்தார்' என வம்படியாகப் பேசிக் கொண்டிருக்கிறார். சட்டசபைக்குள்ளேயே தினகரனை முடக்கிவிட்டார் எடப்பாடி" என்றார் விரிவாக. அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். மார்ச் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தோடு வலுவாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தேர்தலில் தனது ஆதரவாளர்களை தினகரன் களமிறக்கினாலும் பெரிதாக எந்த முன்னேற்றமும் கிடைக்கப் போவதில்லை.
டெல்லியின் விருப்பம்
காரணம், மாநிலம் முழுக்க ஒரே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கப் போவதில்லை. அப்படி ஒதுக்க வேண்டும் என்றால், தினகரன் தனிக்கட்சியைத் தொடங்க வேண்டும். அதை அவர் செயல்படுத்தத் தவறினால், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏவின் முயற்சியாகத்தான் பார்க்கப்படும். தினகரன் தனிக்கட்சி தொடங்குவதையே முதல்வரும் விரும்புகிறார். அப்படிச் செய்துவிட்டால், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தினகரன் தொடர்ந்துள்ள வழக்கும் முடிவுக்கு வந்துவிடும். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில் வலுவாக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடியும். இதைத்தான் டெல்லி மேலிடமும் விரும்புகிறது. சசிகலா குடும்பத்தில் ரெய்டுக்கு மேல் ரெய்டு அடித்ததும் இதை நோக்கி நகர்த்தத்தான். 'தனிக்கட்சி தொடங்கினால், அ.தி.மு.க மீது உரிமை கொண்டாட முடியாது' என்பதை உணர்ந்து மௌனமாக இருக்கிறார் தினகரன். மத்தியில் பா.ஜ.க அரசு நீடிக்கும் வரையில் தினகரனின் முயற்சிகள் பலிக்கப் போவதில்லை" என்றார் விரிவாக.