தினகரனுக்கு எதிராக மீண்டும் எடப்பாடி அணியுடன் கை கோர்த்த திவாகரன்!
தினகரனுக்கு எதிராக மீண்டும் எடப்பாடி அணியுடன் திவாகரன் குடும்பம் கை கோர்த்துவிட்டதாம்.
சென்னை: தினகரனின் விஸ்வரூபத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் மீண்டும் எடப்பாடியார் அணியுடன் திவாகரன் குடும்பம் கை கோர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.
தினகரனுக்கு துணைப் பொதுச்செயலர் பதவியை தந்தது போல மகன் ஜெயானந்துக்கும் அதிமுகவில் முக்கிய பொறுப்பை எதிர்பார்த்தார் திவாகரன். இதனால் தினகரனுடன் ஜெயானந்த் இணைந்து செயல்பட்டு வந்தார்.
திவாகரன் முதலில் ஆதரவு
தினகரனுக்கு எதிராக இளவரசி குடும்பத்தின் விவேக், கிருஷ்ணப்பிரியா களமிறங்கினர். ஆனாலும் திவாகரன் குடும்பம், தினகரனை ஆதரித்து வந்தது.
திவாகரன் கடுப்பு
ஆர்கே நகர் வெற்றிக்குப் பின்னர் தினகரன் தம்மை யாரும் அசைக்க முடியாத தனிப்பெரும் சக்தியாக நினைக்கத் தொடங்கினார். தினகரன் தனிக்கட்சி தொடங்குவதிலும் உறுதியாக இருந்தார்.
பாஸ்கரன் தனி ஆவர்த்தனம்
இதனை திவாகரன் தரப்பு விரும்பவில்லை. இதனால் திவாகரன் மகன் ஜெயானந்த் தனி இயக்கம் ஒன்றை தொடங்குவதாக அறிவித்தார். அதேபோல் தினகரன் தம்பி பாஸ் என்கிற பாஸ்கரனும் தனித்து செயல்படுவேன் என்றார்.
தினகரனுக்கு எதிராக ஜெயானந்த்
தினகரனின் தனிக்கட்சி முடிவுக்கு எதிராகத்தான் ஜெயானந்தும் பாஸ்கரனும் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்களாம். இப்போது தினகரனுக்கு எதிராக மீண்டும் எடப்பாடியார் அணியுடன் திவாகரன் கை கோர்த்துவிட்டதாலேயே இத்தகைய அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகின என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.