முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் தைரியத்திற்கு பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?
சென்னை: அதிமுக இணைப்பு தாமதமாக காரணம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பின்னணியில் உள்ள சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஒரு நபர்தான் என்று கூறப்படுகிறது.
மூன்று நாட்களாக சேலம் மாவட்டத்தில் முகாமிட்டு பல்வேறு நலத் திட்டங்களை துவங்கி வைத்து பேசிய முதல்வர் பழனிச்சாமி, ஓ.பி.எஸ். அணியுடனான இணைப்புக் குறித்து, பெரிதாக யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று கட்சியினரிடமும் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தாலும், அந்த எண்ணிக்கை எந்த நேரமும் குறைந்து விட்டால் ஆட்சி போய்விடுமே என அவர் அஞ்சியபடி இருந்தார்.

எடப்பாடி ஆர்வம்
இரட்டை இலையும் பறிபோய்விடக்கூடாது என்ற ஏக்கத்தால், பிளவுபட்டுக் கிடக்கும் கட்சியை எப்படியாவது இணைத்து விட வேண்டும் என்று, பழனிச்சாமி முழு வீச்சில் களமிறங்கினார். இதற்காக மூத்த அமைச்சர்களை அழைத்துப் பேசினார். அவர்களும் ஆட்சி கவிழக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்ததால் இணைப்புக்கு பாடுபட்டனர்.

உறுதியாக உள்ள ஓ.பி.எஸ்
கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பது என, அமைச்சர்கள் தரப்பில் முடிவெடுத்து அறிவித்தனர். இதனால், பன்னீர்செல்வம் தரப்பினர் இணைப்பிற்கு சம்மதித்து, உடனடியாக வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால், சசிகலா தரப்பினரை அரசியலில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும், அவர்களை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையில் ஓ.பி.எஸ் அணி உறுதியாக இருந்தது.

மிரட்டல்
சசிகலா குடும்பம் கட்சியில் இருக்கும்போது, நமக்கு மரியாதை கிடைக்காது என்பது ஓ.பி.எஸ் அணி எண்ணமாக உள்ளது. ஆனால், இதற்கு பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினரை காட்டி மிரட்டினால்தான், பன்னீர்செல்வம் தரப்பினர் தன்னிடம் முதல்வர் பதவியை பறிக்க எண்ணமாட்டார்கள் என்பது எடப்பாடியார் திட்டமாம்.

திட்டவட்டம்
ஆனால் அதற்கு ஓ.பி.எஸ் டீம் சம்மதிக்காததால், இனிமேல் ஆட்சியே போனாலும் பரவாயில்லை, பன்னீரை கழற்றிவிட்டுவிட வேண்டியதுதான் என்ற எண்ணத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார். இரு அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்பதை மறைமுகமாக பழனிச்சாமி தெரிவித்து விட்டார்.

திவாகரன் சப்போர்ட்
சசிகலாவின் சகோதரர் திவாகரன்தான் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சில மூத்த அமைசர்களை சந்தித்து, பன்னீர் அணி கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டாம் என கூறியதாகவும் இதையேற்று எடப்பாடியார் செயல்படுவதாகவும் கட்சிக்குள் கிசுகிசுக்கப்படுகிறது. பன்னீர் கட்சிக்குள் வந்தால், முதல்வர் பதவியை பறிக்க காய் நகர்த்துவார் என்பதால், அதற்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டாம் என்று திவாகரன் எடப்பாடியாரிடம் கூறியுள்ளாராம்.

பழனிச்சாமி ரெடி
திவாகரன் பேச்சிலுள்ள தனக்கான நியாயத்தை புரிந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமியும் வந்தால் வரட்டும், போனால் போகட்டும் என ஓ.பி.எஸ் அணிக்கு சமிக்ஞை காட்டிவிட்டார். இனிமேல் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப் பயணம் செய்வதை தவிர, தற்போதைக்கு பன்னீர் அணிக்கு வேறு வழியில்லை.












Click it and Unblock the Notifications