தீபாவளி ரயில்கள்... முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலி!
சென்னை: அடுத்த தலைமுறை மின்னணு பயணச்சீட்டு முன்பதிவின் படி நிமிடத்திற்கு 7,000 டிக்கெட் வீதம் முன்பதிவு செய்யப்பட்டதால், தீபாவளிக்கு முன்பதிவு தொடங்கிய சில நேரத்திலேயே அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தது.
இதனால் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் ஆசையில் டிக்கெட் எடுக்க வந்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்தாண்டு அக்டோபர் 22ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. எனவே, அதற்கு முந்தைய திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளையும் சேர்த்து விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறோடு சேர்த்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
அக்டோபர் 17ம் தேதி...
எனவே, அதைக் கணக்கில் கொண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி வெள்ளிக்கிழமை ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
அடுத்த தலைமுறை முன்பதிவு முறை...
இந்நிலையில், கடந்த வாரம் நிமிடத்திற்கு 7200 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் அடுத்த தலைமுறை மின்னணு பயணச்சீட்டு முன்பதிவு முறையை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியிருந்தது.
விற்றுத் தீர்ந்தன...
இதனால், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
ஏமாற்றம்...
எப்படியும் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடியேத் தீருவது என ரயில்வே டிக்கெட் கவுண்டரில் காத்துக் கிடந்த மக்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
சிறப்பு ரயில்கள்...
பொதுவாக விழாக் காலங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படுவது வழக்கம். ஆனால், இதுவரை அத்தகைய அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. எனவே, சிறப்பு ரயில்களிலாவது எப்படியும் டிக்கெட் முன்பதிவு செய்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் கலைந்து சென்றனர்.