விஜய்யுடன் கை கோர்க்கும் தேமுதிக? அப்போ திமுக இல்லையா? பிரேமலதா சொன்ன பதிலை பாருங்க
தூத்துக்குடி: சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. அக்கட்சித் தலைமை கூட்டணி குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடாமலேயே இருந்து வருகிறது. இதற்கிடையே கூட்டணி தொடர்பான கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ள சில கருத்துகள் கவனம் பெற்றுள்ளது.
தமிழகச் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், எந்தக் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதில் மெல்லப் பதில் கிடைத்து வருகிறது. டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்துவிட்டனர். அதேநேரம் தேமுதிக வழக்கம் போலக் கூட்டணி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் சஸ்பென்ஸ் காத்து வருகிறது.

தேமுதிக
ஜனவரி 10ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடந்த நிலையில், அதில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தேமுதிக முதலில் அறிவித்திருந்தது. இதனால் அன்றைய மாநாட்டில் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், வழக்கம் போல நாம் மட்டும் கூட்டணி நிலைப்பாட்டை ஏன் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் எனக் கூறி ட்விஸ்ட் வைத்தார் பிரேமலதா!
கடந்த வாரம் கூட என்டிஏ கூட்டணிக்குள் தேமுதிகவை அழைத்து வரப் பெரிய போராட்டமே நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி மதுராந்தகத்தில் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், அதில் என்டிஏ தலைவர்கள் அனைவரும் மேடையேறினர். அந்த கூட்டத்தில் தேமுதிகவையும் அழைக்கப் பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. கடைசி நேரம் வரை இதற்கான காய் நகர்த்தல்கள் இருந்துள்ளனர். இருப்பினும், கடைசி வரை தேமுதிக பிடிகொடுக்கவில்லை.
திமுக? தவெக?
இதற்கிடையே அவர்கள் திமுக கூட்டணிக்குள் செல்லக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மறுபுறம் விஜய் கட்சியுடன் கூட தேமுதிக கூட்டணி அமைக்கலாம் எனச் சொல்கிறார்கள். இதற்கிடையே இன்று திருச்செந்தூரில் பிரேமலதா அளித்துள்ள பிரஸ் மீட் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரேமலதா
அங்கு முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "இன்று திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்து அவரது ஆசீர்வாதம் பெற்றுள்ளேன்.. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் கூட்டணி குறித்து சரியான முடிவை அறிவிக்கப் போகிறேன். முருகன் அருளால் நல்ல கூட்டணி அமையும். அந்த கூட்டணி அனைவருக்கும் நன்மை கொடுக்கும் கூட்டணியாக இருக்கும். உரிய நேரத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்" என்று மட்டும் கூறினார்.
கவனிக்க வைத்த பதில்
விஜய் உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார். கூட்டாட்சி என விஜய் கட்சி அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக அவர்களிடமே கேட்க வேண்டும் என மட்டும் பதிலளித்தார். அதேநேரம் 2026 தேர்தல் குறித்துக் கேட்டபோது, "2026 தேர்தல் தமிழக மக்களுக்கு நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொடுக்கும். ஒரு வெற்றியைக் கொடுக்கும் தேர்தலாக இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மாற்றம் இருக்கும் என்று பிரேமலதா சொல்லி இருப்பதே இப்போது பேசுபொருள் ஆகியிருக்கிறது. தேமுதிக கூட்டணியில் சஸ்பென்ஸ் தொடரும் நிலையில், 2026ல் மாற்றம் என்ற இவரது பதில் கவனிக்க வைப்பதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications