கூட்டணி அதிருப்தியில் தொண்டர்கள் - டெபாசிட்டை திருப்பி தர தொடங்கியது தேமுதிக!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக தொகுதி உடன்பாடு அமைத்து போட்டியிடுவதாக அறிவித்ததால் கடும் அதிருப்தி அடைந்த தேமுதிகவினர் பலரும் டெபாசிட்டை திருப்பி பெற்று வருகின்றனராம்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க, தே.மு.தி.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று முதலில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் தி.மு.க, தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதி என்று நம்பிய இரு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு மனு கொடுத்தனர்.

தே.மு.தி.க 234 தொகுதிக்கும் நேர்காணல் நடத்தியது. மாவட்ட செயலாளர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், ஆர்வத்துடன் சீட் கேட்டனர். இதற்காக கட்சி தலைமையிடம் சீட் கேட்ட நிர்வாகிகள் 234 தொகுதிக்கும் பணம் செலுத்தி இருந்தார்கள். ஆனால் விஜயகாந்த் தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டி என்று அறிவித்தார். இதனால் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்தால் எம்.எல்.ஏ. சீட் பெற்று வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் விஜயகாந்த் அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விஜயகாந்த் தனித்து போட்டியிடும் முடிவை மாற்றினார். மக்கள் நலக் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு அமைத்து போட்டியிடுவதாக அறிவித்தார். இது தே.மு.தி.க. நிர்வாகிகள் இடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
124 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. ஆனால் இந்த தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கு விருப்பமில்லை என்றே தெரிகிறது.
இந்த நிலையில் கோவையில் ஒரு நிர்வாகி பணம் கேட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தலைமை அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து அவருக்கு உடனடியாக டெபாசிட் பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. அதே போல மற்ற நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் பணம் நேற்று முதல் திருப்பி கொடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications