ஓட ஓட விரட்டி தாக்கிய அதிமுகவினர்...புகாரை வாங்க போலீஸ் மறுப்பு- கும்பகோணம் தேமுதிகவினர் கொந்தளிப்பு
கும்பகோணம்: தங்களை ஓட ஓட விரட்டி தாக்கிய அதிமுகவினர் மீதான புகாரை வாங்க போலீசார் மறுத்து வருவதாக கும்பகோணம் தேமுதிகவினர் கொந்தளிக்கின்றனர்.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு எதிரே மாநகராட்சி நிழற்குடை இருந்தது. அதில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை கிழித்து எறிய விஜயகாந்த் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தேமுதிகவினரும் அதை கிழித்து எறிந்தனர். இதனால் கொந்தளித்து போன அதிமுகவினர் தஞ்சாவூரில் தேமுதிக கொடி, பேனர்களை தீ வைத்து எரித்தனர்.
இதனிடையே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய தேமுதிகவினர் வாகனத்தை கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் அருகே நூற்றுக்கணக்கான அதிமுகவினர் வழிமறித்தனர். கற்கள், சைக்கிள்கள் கொண்டு அந்த வாகனத்தை அடித்து நொறுக்கினர் அதிமுகவினர்.
வாகனத்தில் இருந்த தேமுதிகவினர் உயிருக்கு தப்பி ஓடினர். வாகனத்தில் சிக்கிக் கொண்ட ஓரிருவரையும் சரமாரியாக ஓட ஓட விரட்டி விரட்டித் தாக்கினர் அதிமுகவினர்.
பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்த இந்த தாக்குதல் குறித்து போலீசில் தேமுதிகவினர் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் புகாரை பெற மறுத்து வருவதாக தேமுதிகவினர் கொந்தளிப்புடன் குற்றம்சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications