ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: தே.மு.தி.க., காங். ஆதரவை பெற தி.மு.க. தீவிர முயற்சி
சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு தி.மு.க தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார். மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் தங்களை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இருந்து ஏற்கெனவே ம.தி.மு.க. வெளியேறிவிட்டது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக பா.ஜ.க. தன்னிச்சையாக முன்கூட்டியே அறிவித்ததால் தே.மு.தி.க. கோபத்தில் இருக்கிறது.

வெளியேறும் விஜயகாந்த்
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் மரியாதை இல்லை. எனவே வெளியேறலாம் என்ற முடிவில் விஜயகாந்த் இருக்கிறார். இந்நிலையில் மத்திய அமைச்சர்அருண் ஜேட்லி ஜெயலலிதாவை சந்தித்ததன் மூலம் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி நெருங்குவதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இனியும் இந்த கூட்டணியில் நீடிப்பதா? என்ற மனநிலைக்கு விஜயகாந்த் வந்து விட்டதாக கூறப்படுகிறது.

முடிவு விரைவில் அறிவிப்பு
இந்நிலையில் நாளை அல்லது 23-ந்தேதி விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அப்போது கூட்டணி குறித்த தனது முடிவை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

தி.மு.க. தீவிரம்
அதே நேரத்தில் இப்படி அதிருப்தியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவை பெற தி.மு.க.வும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. தே.மு.தி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற தி.மு.க. மேலிடம் அணுகி வருகிறது.

ஆதரிக்கிறது காங்கிரஸ்
ஏற்கனவே காங்கிரஸ் தரப்பில் தி.மு.க. ஆதரவு கேட்டால் கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் ஆதரவு, தி.மு.க.வுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது உறுதியாகி விட்டது.

இடதுசாரிகள் நிலை?
கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரை தே.மு.தி.க. போட்டியிட்டால் அந்த கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளன. ஆனால் தே.மு.தி.க. தனித்து களம் இறங்குமா? என்பது சந்தேகமே. எனவே இந்த கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications