அத்தனை பேரின் லுக்கும்.. ஒரு கொக்கு மீது... விஜயகாந்த்துக்காக காத்திருக்கும் திமுக, பாஜக, ம.ந.கூ!
சென்னை: தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று விஜயகாந்த் கூறியிருப்பதால் பாஜக தரப்புக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. அதேபோல மக்கள் நலக் கூட்டணிக்கும் நம்பிக்கை பிறந்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் படு வேகமாக தயாராகி வருகின்றன. முன்கூட்டியே தேர்தல் வேலைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.
விருப்பமனு பெறுதல், நேர்காணல் என ஒருபுறமும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மறுபுறமும் என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேமுதிக...
இந்தத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கட்சியாக தேமுதிக உள்ளது. தேமுதிகவால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும் என்ற நிலை இல்லாதபோதும், தங்களது வெற்றி வாய்ப்பை அதிகரிக்க அக்கட்சியின் தயவை நாடிக் காத்துக்கிடக்கின்றன மற்ற கட்சிகள்.
கூட்டணி பேச்சுவார்த்தை...
வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் என அக்கட்சியுடன் பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த இரண்டில் ஒரு கட்சியுடன் தான் விஜயகாந்த் கூட்டணி வைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
மக்கள் நலக்கூட்டணி...
ஆனால், இந்த இரண்டு கட்சிகள் மட்டுமில்லாது, மூன்றாவதாக விஜயகாந்தின் கூட்டணிக்காக மக்கள் நலக்கூட்டணியும் காத்திருக்கிறது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தற்போது இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
எதிர்பார்ப்பு...
இந்த சூழ்நிலையில் விஜயகாந்தும் தங்களது கூட்டணியில் சேர்ந்தால், வெற்றிக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் என்பது மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களின் எதிர்பார்ப்பு.
திமுகவுடன் கூட்டணி...?
ஆனால், கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக பாஜகவுக்கு தண்ணி காட்டி வரும் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியில் இணைவாரா என்பது சந்தேகமே. மேலும் திமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதியாகி விட்டதாக செய்திகள் வெளியாகி வருவதையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.
நம்பிக்கை...
இருப்பினும் கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று நேற்று விஜயகாந்த் கூறியிருப்பதால் பாஜகவும், மக்கள் நலக் கூட்டணியும் புதிய நம்பிக்கையுடன் காத்துள்ளன.