எங்களால்தான் கெஜ்ரிவால் ஜெயிச்சாரு.. தமிழ்நாட்டை வல்லரசாக்குவோம்.. பிரேமலதா 'அடடே’ பேச்சு
Recommended Video
சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றதற்கு காரணமே தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கொள்கைகளைப் பின்பற்றியதுதான் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 20ஆம் ஆண்டு கொடிநாள் விழாவை முன்னிட்டு விஜயகாந்த் இன்று கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
இன்றைக்கு எத்தனையோ மாநிலங்களில் யார் யாரோ முதல் அமைச்சர்களாக வந்து கொண்டிருக்கிறார்கள். விஜயகாந்த் அறிமுகப்படுத்திய திட்டங்களை பின்பற்றிதான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். முதல் தேர்தல், முதல் தேர்தல் அறிக்கையிலேயே வீடு தேடி ரேசன் பொருட்கள் வரும் என்று சொன்ன ஒரே தலைவர் விஜயகாந்த். இன்று ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி இதை நடைமுறைப்படுத்துகிறார். டெல்லியில் இன்று கெஜ்ரிவால் 3-வது முறையாக முதல்வராகி இருக்கிறார்.
அவருக்கு தேமுதிகவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். ஆனால் லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான அரசு என்று விஜயகாந்த் கூறியதை வைத்துதான் கெஜ்ரிவால் இன்று முதல்வராகி இருக்கிறார். அதனால் தமிழக மக்களுக்கு உழைக்கிற சிறந்த தலைவர் விஜயகாந்த் மட்டும்தான். அவருடைய ஒவ்வொரு கொள்கையையும் எடுத்து மற்ற மாநிலங்கள் பயன்படுத்துகின்றன. அதை சூப்பர் பாலிசி என நாம் பேசுகிறோம்.
இதேபோல் தேமுதிகவுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் 1 லட்சம் வாக்குறுதிகளை கொடுத்து அத்தனையையும் நிறைவேற்றி தமிழ்நாட்டையே சிறந்த மாநிலமாக மாற்றி இருப்போம். விஜயகாந்தை தவறவிட்டுக் கொண்டிருப்பவர்கள் தமிழக மக்கள்தான். இனிவரும் காலங்களிலாவது நல்ல தலைவனை நல்ல கொள்கை உடைய கட்சியை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் தமிழ்நாடே இந்தியாவின் வல்லரசாக மாறும். தேமுதிகவா? என்ன கொள்கை இருக்கிறது? என்று வாய்கிழிய பேசியவர்களுக்கு பெரிய விளக்கம் எதுவும் தேவை இல்லை. எங்களுடைய மூவர்ண கொடியில் அத்தனை கொள்கையும் அடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை இன்று மதத்தின் பெயரால். ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால் துண்டாடுகிற அரசியல் கட்சிகள்தான் இன்றைக்கு இருக்கின்றன.
ஆனால் ஒன்றே குலம் ஒரே தேவன் என்று சொல்லக் கூடிய ஜாதி, இனம், மதம், மொழிக்கு அப்பாற்பட்டு செயல்படக் கூடிய ஒரே தலைவர் விஜயகாந்த். அனைவருக்கும் ரத்தம் சிவப்பு என்பதை கொடியில் வைத்துள்ளோம். செல்வம், வளத்தை குறிக்க மஞ்சள் நிறத்தை வைத்திருக்கிறோம். கருப்பு என்பது மக்களுக்கு தேவையற்றதை நீக்குவதாகும். நமது ஜோதி மூலம் பிரகாசமான ஒளியை ஏற்றுவோம் என்பதும் கொடியில் உள்ளது. கூட்டணி தர்மத்தை என்றைக்கும் விஜயகாந்த் மதிப்பவர்; கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் அந்த தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்; அதுதான் கூட்டணி; இல்லை எனில் அது கூடா அணி என்றாகிவிடும்.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.