செல், கேமரா, பூங்கொத்து, மாலை, சால்வை கொண்டுவரக் கூடாது... 9ம் தேதி தேமுதிக செயற்குழு!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேமுதிகவின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்று விஜயகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேமுதிக செயற்குழு கூட்டத்திற்கு வருகை தருபவர்கள் அடையாள அட்டை அவசியம் கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செல்போன், கேமிரா போன்ற எந்தவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களும் உள்ளே கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் யாரும் கேப்டன் அவர்களுக்கு சால்வையோ, மாலையோ, பூங்கொத்தோ அளிக்க வேண்டாம் என்றும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகைதரும் நிர்வாகிகள் குறித்தும் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 09.01.2016 சனிக்கிழமை காலை 9 மணியளவில், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள, ஜே.கே. மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

அடையாள அட்டை
இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்குரிய அடையாள அட்டையுடன் வருகை தந்து பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

எப்படி வரவேண்டும்
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்குரிய அடையாள அட்டை அந்தந்த மாவட்ட கழக செயலாளர்களிடம் இருந்து மேற்கண்ட நிர்வாகிகள் உடனடியாக பெற்றுக் கொள்ளவேண்டும். இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தங்களுடைய மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக அழைத்துக் கொண்டு கூட்டத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வருகை தந்து, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் மட்டுமே அமர வேண்டும்.

கேமராவிற்கு அனுமதியில்லை
தேமுதிக தொண்டர் அணியினரின் வழிகாட்டுதல்படி கூட்டத்திற்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். எவ்வித காரணம் கொண்டும் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு அடையாள அட்டை இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன், கேமிரா போன்ற எந்தவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களும் உள்ளே கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது.

மாலை, சால்வை கூடாது
கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் யாரும் கேப்டன் அவர்களுக்கு சால்வையோ, மாலையோ, பூங்கொத்தோ அளிக்க வேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டுள்ளார். எனவே, எவ்வித காரணம் கொண்டும் அதற்கு அனுமதி கிடையாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் கூட்டணி
தேமுதிக கூட்டணிக்கு வருமாறு பாஜக, திமுக, மக்கள் நலக்கூட்டணி, காங்கிரஸ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஜனவரிக்கு பிறகே கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த். செயற்குழு கூட்டத்திலாவது அறிவிப்பாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications