'ஆர்.கே.நகர் தேர்தல் புறக்கணிப்பு' என விஜயகாந்த் பெயரில் டுபாக்கூர் அறிக்கை- போலீசில் தேமுதிக புகார்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக விஜயகாந்த் பெயரில் போலி அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தே.மு.தி.க. நிர்வாகிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். ஆனால் திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சியான தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக சமூக வலைதளங்களில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்ற வாசகத்திற்கு பதிலாக திராவிடமுன்னேற்ற கழகம் போட்டியிடவில்லை என்ற தவறுதலான வாசகமும் அதில் இடம்பெற்று இருந்தது.
ஆனால் விஜயகாந்த் அப்படி எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் அந்த அறிக்கை போலியானது என்றும் தேமுதிக விளக்கம் அளித்திருந்தது. அத்துடன் விஜயகாந்த் பெயரில் போலி அறிக்கை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. வழக்கறிஞர்கள் அணி செயலாளர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:
நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் வழக்கறிஞர் அணி செயலாளராக செயல்பட்டு வருகிறேன். எங்கள் கழகத்தின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி அதில் எங்கள் கழகத்தின் தலைவர் அறிக்கை கொடுத்ததுபோல, ஒரு அறிக்கையை மோசடியாக தயார் செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இது எங்கள் கட்சியின் தலைவருக்கும், எங்கள் கட்சிக்கும் அவப்பெயரையும், களங்கத்தையும் விளைவிப்பதாகும். தவறான இந்த போலி செய்தியை வெளியிட்டுள்ள நபர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஜயகாந்த் பெயரில் வெளியான போலி அறிக்கையின் நகலும் போலீசிடம் அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications