பிரேமலதா தலையிடாமல் இருந்தா உருப்படுவோம்... தேமுதிக நிர்வாகிகள் நெருக்கடியால் விஜயகாந்த் 'ஷாக்'
சென்னை: தேமுதிக விவகாரங்களில் பிரேமலதா தலையிடாமல் இருந்தால் கட்சி நிச்சயம் உருப்பட்டுவிடும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியதால் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்ட விஜயகாந்தின் தே.மு.தி.க. 104 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட்டையே பறிகொடுத்தார்.
2006-ம் ஆண்டு தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்ட தே.மு.தி.க. 234 தொகுதிகளில் நின்று 1 தொகுதியில் மட்டுமே வென்றது. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறையோ படுதோல்வியைத் தழுவி 2.40% வாக்குகளைத்தான் பெற முடிந்தது. அதன் வாக்கு விழுக்காடு 5.48% பறிபோனது.
வட தமிழகத்தில் மரண அடி
வட மாவட்டங்களில் தே.மு.தி.க.வுக்கு கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள சுமார் 100 தொகுதிகளில் 8-ல் மட்டுமே அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தை தேமுதிகவால் பிடிக்க முடிந்தது. மற்ற தொகுதிகளில் தே.மு.திக. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பா.ம.க.வை விட தே.மு.தி.க.வுக்கு வட மாவட்டங்களில் மரண அடி விழுந்தது.
திமுக கூட்டணிக்கு போயிருக்கலாம்..
இதனைத் தொடர்ந்து தே.மு.தி.க. நிர்வாகிககளை அழைத்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காததால் தான் தே.மு.தி.க.வுக்கு படுதோல்வி ஏற்பட்டது என்று நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
கட்சியினரே ஓட்டுப் போடலை
அத்துடன் தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி ஏற்படாததால் கட்சியினரே கூட ஓட்டுப் போடவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.
பிரேமலதாவை ஓரம்கட்டுங்க...
மேலும் கட்சியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் தலையீட்டுக்கும் நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். அவரால்தான் திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் போய்விட்டது; அவர்தான் மக்கள் நலக் கூட்டணி வைத்தவர்; அவரை ஒதுங்கி இருக்கச் சொல்லுங்கள் என்ற குரலும் உரத்து எதிரொலித்தது. அதேபோல் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மீதும் அடுக்கடுக்காக புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் என்ன சொல்வது எனத் தெரியாமல் விஜயகாந்த் அதிர்ச்சியில் உறைந்துபோனாராம்.