கீரனூரில் மாநாடு நடத்தி கூட்டணி குறித்து தொண்டர்கள் கருத்தைக் கேட்கிறார் விஜயகாந்த்!
சென்னை: தேமுதிகவின் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் கீரனூரில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், வரும் லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது என்பது குறித்து தொண்டர்களிடம் கருத்துக் கேட்கப் போகிறார் விஜயகாந்த்.
ஏற்கனவே கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவும் இப்படித்தான் மாநாடு போட்டு தொண்டர்களின் கருத்தைக் கேட்டார் விஜயகாந்த். பின்னர் தொண்டர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக என்று கூறி அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். ஆனால் கூட்டணி படு வேகமாக பிரிந்து பிளந்து போனது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு மாநாடு போடுகிறார் விஜயகாந்த். இதில், லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து தொண்டர்களிடமே கேட்கப் போகிறார்.
இதுகுறித்து இன்று அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக சார்பில் மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்யுள்ள கீரனூரில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தொண்டர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ....?!