திடீர் திருப்பம் தந்த வைகோ- விஜய்காந்த் நடத்திய திரைமறைவு பேச்சுவார்த்தைகள்!
சென்னை: கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்கள் நல கூட்டணியில் இணைய தேமுதிக சம்மதித்தது.
இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் ம.ந.கூ தலைவர்கள் சந்தித்து பேசினர்.

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று யூகங்கள் இறக்கை கெட்டி பறந்த நிலையில், கூட்டணியெல்லாம் கிடையாது என விஜயகாந்த் தடாலடியாக அறிவித்தார். இதையடுத்து அவரது கட்சி நிலைப்பாடு கேள்விக்குறியானது.
இந்நிலையில், மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைவதற்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டன. இது கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. வைகோ- விஜய்காந்துக்கு நெருக்கமானவர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர். நேற்று இரவே கூட்டணியில் சேர விஜய்காந்த் ஒப்புக் கொண்டார்.
முதல்வர் வேட்பாளர், 124 தொகுதிகள் என்ற விஜய்காந்த்தின் நிபந்தனைகளை ஏற்க மநகூ தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இதனால் தான் விஜய்காந்த் திமுக கூட்டணிக்கு வருவார் என கருணாநிதி கூறியபோது, எதை வைத்து கருணாநிதி இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை என்று வைகோ கூறியிருந்தார்.
இதையடுத்து ம.ந.கூ தலைவர்கள் இன்று காலை 10 மணிக்கு கோயம்பேட்டிலுள்ள விஜயகாந்த் அலுவலகம் வந்தனர். அவர்களை விஜயகாந்த் வரவேற்றார்.
ஏற்கனவே திரை மறைவில் கூட்டணி தொடர்பாக எல்லாமே பேசி முடிக்கப்பட்டு இருந்ததால் 15 நிமிடங்களில் இந்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்துவிட்டன.
இதையடுத்து விஜய்காந்த் தான் முதல்வர் வேட்பாளர், தேமுதிவுக்கு 124 தொகுதிகள் என அறிவித்து கூட்டணியை மநகூ தலைவர்கள் இறுதி செய்தனர்.












Click it and Unblock the Notifications