அதிகாலை 5 மணிக்கே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆஜர்! 'வாலண்டியராக' வந்த தே.மு,தி.க. அதிருப்தி கோஷ்டி!!
சென்னை: அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகமானது அதிகாலை 5 மணி முதலே எம்.எல்.ஏ.க்களால் நிரம்பி வழியத் தொடங்கியது. இன்றைய அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 5 பேரும் வருகை தந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிகாலை 5 மணிமுதலே அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்.எல்.ஏக்கள் வருகை தர தொடங்கிவிட்டனர்.. அதேபோல் ராயப்பட்டையை அதிர வைக்கும் வகையில் அதிகாலை முதலே கட்சித் தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டுவிட்டனர்..
அ.தி.மு.க.வின் 152 எம்.எல்.ஏக்களில் 144 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். சபாநாயகர் தனபால் இந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்பதால் அவர் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறையில் இருப்பதால் ஆஜராகவில்லை. இதர எம்.எல்.ஏக்கள் சிலர் கட்சித் தலைமையிடம் தாங்கள் வர இயலாத காரணத்தைக் கூறி அனுமதி பெற்றிருந்தனராம்..

இவர்கள் வராத குறையைப் போக்கும் வகையில் தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏக்களான சுந்தரராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், சாந்தி உட்பட 5 பேர் இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வந்திருந்தனர். இன்றைய கூட்டம் மிகச் சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது.
அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதாவின் பெயரை முதல்வர் பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதனை மூத்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வழிமொழிந்தார். பின்னர் ஒருமனதாக சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications