'சிங்கம்' சிங்கிளா நிக்க வேண்டியதுதானே.... பாமகவை கிண்டலடிக்கும் தேமுதிகவினர்!
சென்னை: சிங்கங்கள் சிறு நரியிடம் பிச்சை கேட்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதை வைத்து இப்போது பாமகவினரைப் பார்த்து தேமுதிகவினர் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனராம்.
ஏற்கனவே நொந்து போயுள்ள பாமகவினர், தேமுதிகவினரின் இந்தக் கிண்டலால் மேலும் எரிச்சலாகியுள்ளனராம்.
அவர்தானே சிங்கம் என்கிறார். பிறகெதற்கு கூட்டணிக்கு விரும்புகிறார். தனியாக போய் நிற்க வேண்டியதுதானே என்று நக்கல் விட்டு வருகின்றனராம் தேமுதிகவினர்.
தொகுதிப் பங்கீட்டில் முட்டல் மோதல்
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக, தேமுதிக இடையேதான் பெரும் பிரச்சினை நிலவுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவதிலும், விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருப்பதிலும், சளைக்காமல் செயல்படுகின்றனர்.
நடுவில் சிக்கி சட்னியான பிற கட்சிகள்
இவர்களின் மோதலால் பாஜக உள்பட கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பிச்சை போடுவது போல
இந்த இரு கட்சிகளும் தாங்கள் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ள தொகுதிகள்தான் உங்களுக்கு என்பது போல நடந்து கொள்வதாக பாஜக உள்பட அனைத்துக் கட்சிகளுமே புலம்புகின்றனவாம்.
சேலம் - கள்ளக்குறிச்சியால் மோதல்
சேலம், கள்ளக்குறிச்சி தொகுதி தொடர்பாக தற்போது மோதல் உக்கிரமாகியுள்ளது. இதில் சேலம் தொகுதியில் தேமுதிக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை விட்டுத் தர முடியாது என்று கூறி விட்டார் ராமதாஸ். அதேபோல கள்ளக்குறிச்சிக்கும் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கி வைத்து விட்டார்.
சுதீஷுக்கு இல்லாமலா... தேமுதிக டென்ஷன்
இதனால் தேமுதிக கடுப்பாகியுள்ளது. சேலம் அல்லது கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷை நிறுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் ராமதாஸ் இப்படி இடையில் புகுந்து டயரை பஞ்சராக்கி விட்டதால் தேமுகிகவினர் ஆத்திரமடைந்துள்ளனர்.
சிங்கம் பிச்சை கேட்காது
இந்த நிலையில் தர்மபுரியில் அன்புமணியை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், சிங்கக் குட்டிகள் சிறுநரியிடம் போய் பிச்சை கேட்பதா? என்று பேசியிருந்தார். இதை வைத்து இப்போது தேமுதிகவினர் கடுப்பு கலந்த நக்கலையும், நையாண்டியையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.
அப்ப சிங்கிளா போக வேண்டியதுதானே...
சிங்கம் என்றால் பா.ம.க. சிங்கிளாக நிற்க வேண்டியது தானே தேமுதிகவினர் கிண்டலடிக்கிறார்களாம். இதைக் கேட்டு பாமக தரப்பு மேலும் உஷ்ணமாகியுள்ளதாம்.