பீகார் பாடம்: பாஜகவுக்கு விஜய்காந்த் பை..பை- மக்கள் நலக் கூட்டணியில் இணைகிறார்?- கூடவே தமாகா!
சென்னை: பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்-லாலு- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணியையும் பலப்படுத்துவதற்காக முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கூட்டணியில் எப்படியும் விஜயகாந்தின் தே.மு.தி.க, வாசனின் த.மா.கா ஆகியவற்றையும் கொண்டுவந்துவிட வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
பீகாரில் கால் நூற்றாண்டுகாலமாக பரம வைரிகளாக இருந்த நிதிஷ்- லாலு இருவரும் இணைந்து கை கோர்த்ததால் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. இத்தேர்தல் முடிவுகள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க. வுக்கு மாற்று அணி என அவ்வப்போது குரல்கள் எழுந்தாலும் அது போணியானதாக சரித்திரம் இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் இருக்கிற அத்தனை பெரிய கட்சிகளும் பா.ஜ.க தலைமையில் அணி வகுத்தன. பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க, பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளும் கை கோர்த்தும் அ.தி.மு.க.தான் வெல்ல முடிந்தது.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைமையிலான அணி சிதைந்தது. இப்போது இடதுசாரிகள், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் அ.தி.மு.க.- தி.மு.க.வுக்கு மாற்று அணியை அறிவித்துள்ளன. இந்த அணியில் எப்படியாவது தே.மு.தி.க, த.மா.காவை கொண்டு வந்துவிட வேண்டும் என்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
த.மா.கா.வைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர விருப்பத்துடன் இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் மிக அதிகபட்சமாக அந்த அணியில் 8 இடங்கள் ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட் தான் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதை அ.தி.மு.க. கறாராக தெரிவித்துவிட்டது. ஆனால் அக்கட்சியில் தலைவர்கள் எண்ணிக்கை இந்த சீட்டுகளின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பதால் வாசனால் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது.
மக்கள் நலக் கூட்டணிக்கு தாவினால் மட்டுமே தலைவர்களுக்கு சீட் கொடுத்து கட்சியைத் தக்க வைக்க முடியும் என்ற நிலையில் இருக்கிறார் வாசன்.
இதேபோல் தே.மு.தி.க.வைப் பொறுத்தவரையில் மக்கள் நலக் கூட்டணிக்கு போனால் தலைமை தாங்கும் கட்சியாகவும் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தும் முன்னிறுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தி.மு.க. கூட்டணிக்கு போகும் போது இடங்கள்தான் கிடைக்குமே தவிர ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது துளியும் கிடைக்கப் போவதில்லை.
தி.மு.க.வை தனிமைப்படுத்தி தோற்கடித்தால் எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை தக்க வைத்து தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு மாற்றான 2வது பெரிய கட்சி என்ற இமேஜை நிலைநிறுத்தலாம் என்கிற ஆலோசனையும் தே.மு.தி.க.வில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தி 2 கட்சிகளையும் தங்கள் அணிக்கு கொண்டுவர மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனால் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி விரைவில் விஸ்வரூபமெடுக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.