நாங்க 'உருட்டுக்கட்டையுடன்' ஆட்சி நடத்தமாட்டோம்... சொல்வது விஜயகாந்த்
தஞ்சாவூர்: தேமுதிக தேர்தலில் வென்றால் நிச்சயம் 'உருட்டுக்கட்டையுடன்' ஆட்சி நடத்தமாட்டோம் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உறுதியளித்துள்ளார்.
தஞ்சையில் தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
6 கட்சிகளை கொண்ட எங்கள் கூட்டணிக்கு என்றும் ஏறுமுகம் தான். முதல்வராக விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனது அப்பா, அம்மா கிராமத்தில் பிறந்தவர்கள். முதல்வராக இதை விட என்ன தகுதி வேண்டும்.
உருட்டுக்கட்டை ஆட்சி இருக்காது..
விஜயகாந்த் செல்லும் இடங்களில் எல்லாம் யாரையாவது அடிக்கிறார் என்று கூறுகிறார்கள். தவறு எங்கு நடந்தாலும் தண்டிக்க தயங்க மாட்டேன். எனக்கு நடிக்க தெரியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களோடு மக்களாக இருந்து ஆட்சி செய்வோம். உருட்டுக்கட்டையுடன் கூடிய ஆட்சி (அதிமுகவைப் போல) இருக்காது. எனக்கு மானசீக குரு எம்.ஜி.ஆர். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். அதேபோல் தான் நாங்களும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறோம்.
யாரும் தூங்காதீங்க...
வைகோவும், திருமாவளவனும் கூட்டணி ஆட்சி என்று சொன்னார்கள். நானும் உடனே கூட்டணி ஆட்சி என்று சொல்லிவிட்டேன். ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் மீது தான் குறைசொல்லி பேசுவேன். தேர்தல் முடியும் வரை யாரும் தூங்கக்கூடாது. கூட்டணி கட்சியினர் அனைவரும் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
5 காசுகூட வாங்கலையே..
நான் யாரிடமும் 5 காசு கூட வாங்காமல் சீட் கொடுத்து இருக்கிறேன். எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் அப்பழுக்கற்றவர்கள். நாட்டை கொள்ளையடித்து கொண்டு இருந்தவர்களை இதுவரை யாரும் தட்டி கேட்கவில்லை. இப்போது நீங்கள் வந்து இருக்கிறீர்கள்.
தேமுதிக ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு
தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணிக்கு 130 முதல் 155 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 இடங்கள் வந்தாலும் நாம் வெற்றி பெறுவோம். இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போர். இதில் தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் நாங்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அதர்மத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கமாட்டோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.
மக்களுக்காகவே வாழ்வேன்..
விஜயகாந்த் கடைசி வரை மக்களுக்காகவே வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும். பணம் கொடுத்து வாக்கு கேட்கலாம் என்று நினைக்கிறார்கள். அதிகாரிகளை வைத்து எதுவும் செய்யலாம் என்று நினைத்தார்கள். இப்போது அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி கொண்டே இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிர்வாகம் இருக்கும். சட்டத்திற்கு உட்பட்டு தான் போலீசார் நடக்க வேண்டும். எங்கள் கூட்டணி கட்சி தொண்டர்களும் சட்டத்திற்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.