நானே முதல்வர் வேட்பாளர்- யார் தலைமையிலும் கூட்டணி, பாமகவுக்கு இடம் தரகூடாது- இது விஜயகாந்த் கண்டிஷன்
சென்னை: நானே முதல்வர் வேட்பாளர்; எங்கள் தலைமையில் கூட்டணி; தி.மு.க- அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் பா.ஜ.க.வுக்கு நிபந்தனைகளை விதித்து வருகிறார். இதற்கு நேர்மாறாக, 'நானே முதல்வர் வேட்பாளர்; யார் தலைமையிலும் கூட்டணி; பா.ம.க. வரகூடாது என்ற அதிரடி நிபந்தனையை பா.ஜ.கவுக்கு விதித்திருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். இதனால் பா.ஜ.க. தரப்பு ரொம்பவே அதிர்ந்து போய்கிடக்கிறது.
தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருமா? உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறுமா? ஜனாதிபதி ஆட்சியெல்லாம் அமல்படுத்தி பின்னர் தேர்தல் நடைபெறுமா? என்ற பட்டிமன்றம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சோலோவாக தேர்தல் களத்துக்குப் போய் அறுவடை செய்துவிடலாம் என கண்டன கனவை 'வெள்ளம்' அடித்து நாசமாக்கிவிட்டது... நிவாரண நிதி கொடுத்தாவது பரிகாரம் தேடிவிடலாமா என பரிதவிக்கிறது அக்கட்சி... மக்கள் அவ்வளவு அதிருப்தியில் இருக்கிறார்கள்..

நம்பிக்கையில் திமுக
தி.மு.கவோ, தே.மு.தி.க, காங்கிரஸ் மற்றும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் எப்படியும் நம்முடன் வந்துவிடுவார்கள்.. அத்தோடு ஆளும் அ.தி.மு.க. அரசு மீது "வெள்ள" அதிருப்தி வேறு இருக்கிறது.. நிச்சயம் 2016-ல் ஆட்சி அதிகாரம் நமக்கே என்ற தெம்புடன் வலம் வருகிறது.

2021 கனவில் ம.ந.கூட்டணி
ம.தி.மு.க. தலைமையிலான இடதுசாரிகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணியோ பா.ஜ.க; பா.ம.க; அ.தி.மு.க; தி.மு.க. ஆகியவற்றுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது; தே.மு.தி.க, த.மா.க. எங்களுடன் வரும், கணிசமான இடங்களைக் கைப்பற்றுவோம்; அடுத்த 2021 தேர்தலில் நாமே பிரதான அணியாக இருப்போம் என கனவு 'காண்பதற்காக' இப்போதிருந்தே காத்துக் கொண்டிருக்கிறது.

கேஜ்ரிவால் போல
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலைப் போல நாங்களும் சாதிப்போம் என முதல்வர் வேட்பாளரை அறிவித்து 10 மாதமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது பா.ம.க. எங்கள் தலைமையில்தான் கூட்டணி எனவும் அக்கட்சி 10 மாதமாக கரடியாக கத்திக் கொண்டிருந்தாலும் எந்த ஒரு கட்சியும் அதை ஏற்று போகவே இல்லை.

திக்கு தெரியாத பாஜக
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் என்னதான் செய்யப் போகிறோமோ என திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.; இன்னமும் நம்பிக்கையை சற்றும் விட்டுக் கொடுக்காமல் பா.ம.க, தே.மு.தி.க.வை எப்படியும் இழுத்துவிடுவோம் என்கிற அசாத்திய தைரியத்தில் இருக்கிறது பா.ஜ.க.
இதனடிப்படையில்தான் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும் பா.ஜ.க. தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசியிருக்கின்றனர்.

அன்புமணி போட்ட போடு
அன்புமணியைப் பொறுத்தவரையில் நான்தான் முதல்வர் வேட்பாளர்; பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி; தி.மு.க.- அ.தி.மு.க. தவிர இதர கட்சிகள் வரலாம் என கறாராக கூறிவிட்டார். சரி இவர்தான் இப்படி கறாராக இருக்கிறாரே என அடுத்து விஜயகாந்தை சந்திக்க போனது பா.ஜ.க. டீம். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மோகன்ராஜூலு கொண்ட மூவரணிதான் போனது.

மிரட்டிய கேப்டன்
ஆனால் ஆரம்பத்திலேயே 'அசால்ட்டு' காட்டிவிட்டார் கேப்டன். சுமார் 1 மணிநேரம் இந்த மூவரணியை காக்க வைத்துவிட்டார். பின்னர் ஏதோ வேண்டா வெறுப்பாக வந்தவர், எதையும் ஒளிவுமறைவு இல்லாமல் மிகத் தெளிவாகவே பட்டென உடைத்து பேசிவிட்டார் கேப்டன்.
அதாவது என்னை தி.மு.கவும் மக்கள் நலக் கூட்டணியும் கூப்பிடுகிறார்கள்; நான் உங்க அணிக்கு வர வேண்டுமெனில் நான்தான் முதல்வர் வேட்பாளராக இருப்பேன்; பா.ம.க. வரவே கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறார். அத்துடன் பா.ஜ.க. தலைமையிலும் கூட கூட்டணிக்கு தயார் என அதிரிபுதிரியாக பேச ஆடிப்போய்விட்டது பா.ஜ.க. டீம்.

அதிர்ந்த பா.ஜ.க.
அவரு மாதிரியே இவரு சொன்னாலும் அவரை விட இவரு பெட்டரா? இவரை விட அவரு பெட்டாரா? என புரியாமல் ஆக பா.ம.க. அல்லது தே.மு.தி.க. ஒன்றோடுதான் கூட்டணி வைக்க முடியும் என்ற 'தெளிவான' நிலைக்கு வந்திருக்கிறது பா.ஜ.க.வின் தற்போதைய தேர்தல் வியூகத் தேர்.
இந்த வியூகத் தேர் எப்படி நகரும் என்பது 'டெல்லி'யின் கைகளில்தான்!












Click it and Unblock the Notifications