பேச்சுவார்த்தை சுமூகம்- மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைவது உறுதி... வைகோ நம்பிக்கை
மதுரை: மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பது குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது; நிச்சயம் தேமுதிக தங்களது அணியில் இணையும் என்று அதன் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலருமான வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரையில் வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. தேதி அறிவிக்கும் முன்பே விதிமுறைகளை மக்கள் நலக்கூட்டணி முழுமையாக கடைபிடித்து வருகிறது.
22 மாவட்டங்களில் நாங்கள் பிரசாரத்தை முடித்துள்ளோம். இந்த தேர்தல் பந்தயத்தில் நாங்கள் முன்னணியில் செல்கிறோம். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின் போது தி.மு.க. ஊழல் கட்சி என்பதற்காக அதனை முறியடிக்க அ.தி.மு.க.வுக்கு விஜயகாந்த் ஆதரவு கொடுத்தார்.
தற்போது அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக தி.மு.க.வுக்கு அவர் துணைபோக மாட்டார். விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணி சுமூகமாக பேச்சு நடத்தி வருகிறது. அவர் எங்கள் கூட்டணிக்கு வருவார்.
ராஜிவ் கொலை வழக்கில் காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டு களவாணிகள். தி.மு.க. ஆட்சியின்போது கருணாநிதி முழுமையாக முயற்சி செய்திருந்தால் 7 பேரை அப்போதே விடுதலை செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. மாறாக தி.மு.க. ஆட்சியின்போது தான் பிரியங்கா, வேலூர் சிறைக்கு சென்று நளினியை மிரட்டி சென்றிருக்கிறார். மக்கள் நலக்கூட்டணி எந்த கருத்து கணிப்பையும் நம்பி இருக்கவில்லை. மக்கள் பலத்தை நம்பியே உள்ளது.
தேர்தலின்போது நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்ய முயற்சி நடக்கிறது. இது தொடர்பான புகார்களை உடனடியாக தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற தேர்தலில் தி.மு.க., திருமங்கலம் பார்முலாவையும், அ.தி.மு.க. ஸ்ரீரங்கம் பார்முலாவையும் பின்பற்ற இருக்கிறது. இதனை முறியடிக்க வேண்டும். இருகட்சிகளின் செயல்களையும் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.
இந்த தேர்தலில் கண்ணுக்கு தெரியாத புரட்சி நடக்கிறது. அது மக்கள் நலக்கூட்டணிக்கு சாதகமாக அமையும்.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.