தனித்துப் போட்டியிட்டால் தேமுதிக சிதறிப் போகும்... திமுக காசி முத்துமாணிக்கம் எச்சரிக்கை
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் எதிர்காலத்தையே இழக்க வேண்டி வரும் என்று திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
சென்னையில், மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி தென்பழனி நகரில் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு கே.வி.சண்முகம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இதை துவங்கி வைத்து பேசிய அவர், "விஜயகாந்தின் தே.மு.தி.க என்ற நதியை தி.மு.க எனும் கடல் அழைத்தது. கடலில் எல்லா நதிகளும் இணைவதில்லை. அதே நேரத்தில் நதி வரவில்லை என்பதற்காக கடல் வற்றிப்போனதாக வரலாறு இல்லை.
பழம் பாலிலும் விழலாம். பூஜையிலும் சேரலாம். உணவாகவும் மாறலாம். யாரும் சீண்டப்படாமல் அழுகியும் போகலாம். அதே நேரத்தில் பழம் விழுந்த பாலைத்தான் சாப்பிடுவேன் என்று எந்த குழந்தையும் அடம் பிடிப்பதில்லை.
எனவே இந்த தேர்தலில் தே.மு.தி.க. இல்லாவிட்டாலும் தி.மு.க. வெற்றி பெறும். தே.மு.தி.க.வுக்கு இனி எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. இனிமேல் அக்கட்சி சீண்டுவார் இன்றி சிதறும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications