திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் விரட்டும் நேரம் வந்து விட்டது.. பிரேமலதா ஆவேசம்
சென்னை: சென்னை: திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தமிழகத்தை விட்டு விரட்டும் நேரம் வந்துவிட்டது என தேமுதி மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் மகளிரணி மாநாட்டில் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒ.எம்.சி. மைதானத்தில் தே.மு.தி.க. சார்பில் மகளிரணி மாநாடு இன்று மாலை நடந்தது. இதில் கலந்து கொண்ட மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: தேமுதிக மகளிரணி மாநாட்டில் அதிக அளவில் பெண்கள் கலந்துகொள்ள வந்ததே தேமுதிவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் அறிவிப்புகளாகவே உள்ளன. அனைத்து திட்டங்களும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் செயல்படுத்தபடுவதில்லை. செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதே சென்னையின் வெள்ளத்திற்கு காரணம். வெள்ளம் ஏற்பட்டபோது சென்னை முடங்கிப் போனதற்கு அதிமுக அரசு தான் காரணம். அதிமுக அரசின் நிர்வாகத் திறமை இன்மையால் ஆயிரக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்தனர். வெள்ள நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை.
மத்திய அரசு வழங்கிய 2 ஆயிரம் கோடி நிவாரணத் தொகையில் இருந்தே மாநில அரசு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியுது. இலவச பொருட்கள் தருவதாக கூறுபவர்களிடம் தன்மானத்தை இழக்காதீர்கள். இலவச பொருட்களை வாங்க பெண்கள் முண்டியடித்துச் செல்வது வருத்தம் அளிக்கிறது.என்று பிரேமலதா கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் மாற்றம் ஏற்பட அனைத்து மக்களும் தயாராக இருக்க வேண்டும். வரும் தேர்தலில் அதிமுக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். தமிழகம் கடனில் தத்தளிப்பதுதான் அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனை. ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விவகாரத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் நாடகம் ஆடுகின்றன.
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் ஊழல் ஆட்சி நடத்தியுள்ளன. திமுக 2ஜி ஊழலில் சிக்கித் தவிக்கின்றன. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியுள்ளார். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி, அதிமுக என்றால் அனைத்திலும் தில்லு முல்லு எனவே திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தமிழகத்தை விட்டு விரட்டும் நேரம் வந்துவிட்டது. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.