சென்னையின் இந்த சீரழிவுக்கு அதிமுகவும், திமுகவும் தான் காரணம்: அன்புமணி ராமதாஸ்
சென்னை: வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்டுள்ள சீரழிவுக்கு அதிமுகவும், திமுகவும் தான் காரணம் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. வெள்ளத்தால் அவதிப்படும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை வேளச்சேரி பகுதிக்கு இன்று சென்றார்.
மல்லிகைப்பூ நகர், அருணாசலபுரம், கோவிந்தராஜபுரம், அவ்வை நகர், லட்சுமிபுரம், தரமணி, பெரியார் நகர், விஜயநகர், தேவி கருமாரியம்மன் நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நிவாரணம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரி மக்களுக்கு அன்புமணி ராமதாஸ் அரிசி, போர்வை ஆகியவற்றை வழங்கினார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி மூட்டையை வழங்கினார்.

அவதி
மழை கொட்டித் தீர்த்து 2 வாரம் ஆகியும் யாரும் இங்கு வந்து பார்க்கவும் இல்லை, நிவாரணமும் வழங்கவில்லை. மக்கள் குடிக்க நீர் இன்றி அல்லல்படுகிறார்கள். கடலூர் மக்களின் நிலைமை இதைவிட மோசம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

நிதி
வெள்ளத்தையொட்டி மாநில அரசு ரூ.500 கோடியும், மத்திய அரசு ரூ.940 கோடியும் முதல்கட்டமாக ஒதுக்கியுள்ளது போதாது. மாறாக மத்திய, மாநில அரசுகள் ரூ.20 ஆயிரம் கோடி நிவாரண நிதி அளிக்க வேண்டும். அதில் ரூ.5 ஆயிரம் கோடியை முதல்கட்டமாக மத்திய அரசு அளிக்க வேண்டும் என்கிறார் அன்புமணி.

அதிமுக அரசு
நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் சரி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதிலும் சரி தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. இதை வைத்து நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சீரழிவுக்கு அதிமுகவும், திமுகவும் தான் காரணம் என அன்புமணி கூறியுள்ளார்.

வெட்கக்கேடு
சென்னை போன்ற பெருநகரில் மழையால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது வெட்கக்கேடான விஷயம். அதிமுகவும், திமுகவும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் அன்புமணி.

சென்னை
வெள்ளநீரில் 80 சதவீதம் கடலில் கலக்கிறது. சென்னையை சுற்றி இருக்கும் 3 ஆறுகளை தூர்வாரினாலேயே மழை வெள்ளநீர் வடிந்துவிடும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications