அதிமுக - திமுக போட்டி போட்டுக்கொண்டு பகையை வளர்க்கக் கூடாது..சொல்கிறார் வைகோ
காஞ்சிபுரம்: அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பகைமையை வளர்க்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று முன்தினம் அதிமுக உறுப்பினர் குணசேகரன் நமக்கு நாமே பயணம் குறித்து பேசியதற்கு எதிராக திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

வெளியேற மறுத்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 80 பேரை குண்டுக்கட்டாக தூக்கி வந்து நேற்று வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஒருவாரத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தரையில் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது: சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை ஒருமையில் பேசுவது ஏற்புடையதல்ல. சபாநாயகரின் உருவ பொம்மை எரிப்பு என்பது கண்டிக்கத்தக்கது என்றார். மேலும், திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக போராட்டத்திற்கு சபாநாயகர் தனபால் எதிர்ப்பு தெரிவிக்காதது வரவேற்கத்தக்கது என்று கூறிய வைகோ, திமுக - அதிமுக ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பகைமையை வளர்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications