திமுகவின் '3 டிஜிட்' கனவு கலைந்தது.. சட்டசபையில் அதிமுக பலம் 136-ஆக அதிகரிப்பு!
3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளதால் திமுகவின் 3 டிஜிட் கனவு கலைந்துள்ளது.
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு 2016, மே 16ஆம் தேதி நடைபெற்ற 15வது சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகின. இதில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை சட்டப்பேரவை தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்ததால் மீதமுள்ள 232 சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அதிமுக கூட்டணி-134, திமுக கூட்டணி - திமுக-89, காங்கிரஸ்-8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1 வெற்றி பெற்றிருந்தன.
வெற்றி பெற்ற 134 தொகுதிகளில் அதிமுக கூட்டணியினரும் இரட்டை இலை சின்னத்தில் வென்றனர். மொத்தமாக திமுக கூட்டணி வென்ற தொகுதி எண்ணிக்கை 98 ஆகும்.
இருப்பினும் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்றில் இரண்டு தொகுதிகளிலாவது வெற்றி பெற்று, திமுக கூட்டணி வென்ற இடங்களை மூன்று இலக்கமாக உயர்த்திக்கொள்ள அக்கூட்டணி வெகுவாக பாடுபட்டது. ஆனால், மூன்று தொகுதிகளிலுமே அதிமுக வெற்றி பெற்றுவிட்டதால், திமுக கூட்டணியின் கனவு கலைந்துவிட்டது.
அதிமுகவை பொறுத்தளவில் அது தனித்து 131 தொகுதிகளில் வென்றிருந்தது. 3 கூட்டணி கட்சிகள் தலா 1 இடத்தில் வென்றிருந்தன. அதேநேரம், திருப்பரங்குன்றம் அதிமுக எல்எல்ஏ சீனிவேல் மரணம் அடைந்தார். இதனால் அதிமுக எம்எல்ஏ பலம் 130 ஆக குறைந்தது.
இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தஞ்சை, அவரக்குறிச்சி மற்றும், இடைத்தேர்தலை சந்தித்த திருப்பரங்குன்றத்தில் அதிமுக வெற்றிவாகை சூடியுள்ளது. எனவே, அதிமுக 133 தொகுதிகளில் வெற்றியை சுவைத்துள்ளது. இதனால் கடந்த பொதுத் தேர்தலை விட அதிமுகவுக்கு கூடுதலாக 2 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். அக்கூட்டணியின் பலம் சட்டசபையில் 136-ஆக உயர்ந்துள்ளது.