"தளபதி திருவிழா" .. அழகிரி பிறந்த நாளில் சென்னையில் ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம்
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் பிறந்த நாளன்று சென்னையில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக திமுகவில் இருந்து தற்காலிகமாக மு.க. அழகிரி நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் மு.க. அழகிரி

அத்துடன் தமது பிறந்த நாளான ஜனவரி 30-ந் தேதியன்று முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாகவும் அழகிரி மிரட்டிக் கொண்டு இருக்கிறார்.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் மு.க. அழகிரியின் பிறந்த நாளான ஜனவரி 30-ந் தேதியன்று சென்னையில் ஸ்டாலின் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் குறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள தென் சென்னை மாவட்ட திமுக செயலர் ஜெ. அன்பழகன், "தளபதி" திருவிழா என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திமுகவில் அழகிரி நீக்கப்பட்ட நிலையில் ஸ்டாலினின் கைதான் ஓங்கியுள்ளது. அழகிரி நீக்கத்துக்குப் பின்னர் நேற்று சேலத்தில் மிகப் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதைவிட மிகப் பிரம்மாண்டமாக அதுவும் அழகிரி பிறந்த நாளன்று நடத்தப்படுவதால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கில் சென்னையில் குவிவார்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications