ஆறு அங்க இருக்கு... கோவணத்தை இங்கயே அவிழ்த்துட்டான்: பொன்முடி பேச்சால் கடுப்பில் திமுக நிர்வாகிகள்!
விழுப்புரம்: திமுகவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் புதிய மாவட்ட செயலாளர் பதவிக்கு பலரும் போட்டி போடுவதை மிகக் கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து அக்கட்சியில் மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டது. இதனால் குறுநில மன்னர்களாக கோலோச்சிக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 8-ந் தேதியன்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியிருக்கிறார். அக்கூட்டத்தில் பொன்முடி பேசியதாவது:
மாவட்டத்தைப் பிரித்துவிட்டார்கள், நான் போய்விடுவேன் என்று நினைத்து மாவட்டச் செயலாளர் ஆகும் கனவோடு பலரும் அலைவதாகக் கேள்விப்பட்டேன்.
'ஆறு அங்க இருக்கு... கோவணத்தை இங்கயே அவிழ்த்துட்டான்' என்று சொல்வது மாதிரி, இப்பவே பதவியைப் பிடிக்க கோபாலபுரத்துக்கும் தளபதி (ஸ்டாலின்) வீட்டுக்கும் பெங்களூருக்கும் (கருணாநிதி மகள் செல்வி வீடு) பலரும் படையெடுப்பது எனக்குத் தெரியும்.
நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கதான் இருப்பேன். நான்தான் ஒன்றியச் செயலாளர் தேர்தலை நடத்தப்போறேன். அதனால எல்லாரும் அடக்கமா இருங்க...
இவ்வாறு பொன்முடி காட்டமாக பேசியிருப்பது அக்கட்சி நிர்வாகிகளை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளதாம். இதையும் புகாராக திமுக தலைமை கழகத்துக்கு கடிதமாக தட்டிவிட்டிருக்கின்றனர் உடன்பிறப்புகள்.