சட்டசபைத் தேர்தல்: திமுக வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவடைகிறது
சென்னை: திமுக வேட்பாளர் நேர்காணல் நேற்றுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் கடந்த மாதம் 22ம் தேதி முதல் நேர்காணல் நடந்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் விருப்பமனு தந்தவர்களை தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தினர்.

கடந்த 27ம் தேதி வரை முதல்கட்ட நேர்காணல் நடந்தது. 2ம் கட்ட நேர்காணல் இந்த மாதம் 2ம் தேதி தொடங்கியது. இறுதி நாளான நேற்று காலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று மாலை தொடர்ந்து நேர்காணல் நடந்தது. இந்நிலையில் திமுக நேர்காணல் இன்று ஒருநாள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 9 மணிக்கு சென்னை கிழக்கு மாவட்டத்துக்கான நேர்காணல் நடைபெறுகிறது. அத்துடன் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் திமுக நேர்காணல் முடிக்கப்பட்டுவிடும்.
இதுவரை 228 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த 4000க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று நடைபெறும் 6 தொகுதிகளுடன் திமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு பெருகிறது.












Click it and Unblock the Notifications