“அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுகவின் ஊழல் தோண்டி எடுக்கப்படும்”.. குறிஞ்சிப்பாடியில் சீறிய எடப்பாடி!
கடலூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுகவின் ஊழல் தோண்டி எடுக்கப்படும் என குறிஞ்சிப்பாடியில் மக்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குறிஞ்சிப்பாடியில் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பேசுகையில், "வள்ளலார் திருச்சபை கட்டுவதில் பொதுமக்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் அமைக்க வேண்டும். குறிஞ்சிப்பாடி தொகுதியில் அடிக்கடி மழை பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யபப்டும்.

சிப்காட்டில் பல தொழில்கள் இயங்காமல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் அவற்றை எல்லாம் சரிசெய்து செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மீனவர்கள் அதிகம் உள்ள தொகுதி இது என்பதால் அவர்களுடைய வாழ்வாதார முன்னேற்றத்துக்கு தேவையானவற்றை செய்து கொடுப்போம். நெசவாளர்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி என்பதால் இன்றைய தினம் அந்த தொழில் சரிந்து நலிவடைந்து உள்ளது.
அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் நிவர்த்தி செய்யப்படும். அதிமுக ஆட்சியின்போது நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று 300 கோடி ஒதுக்கப்பட்டது. அவர்களுக்கு பசுமை விடு கட்டிக்கொடுத்தது அதிமுக அரசு.
நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அதிமுக ஆட்சியில் சம்பளம் கைகளில் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் அவர்களுக்கு வங்கியில் போடப்படுகிறது. அதுவும் 15 நாட்களுக்கு ஒருமுறைதான். அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் கையில் தினந்தோறும் கொடுக்கப்படும்.
டிராக்டர் மானியம் டயர் மானியம் உள்ளிட்டவற்றை அதிமுக கொடுக்கப்பட்டது. முறைப்படி ஆன்லைனில் பதில்வு செய்யப்பட்டு சீனியாரிட்டி படி கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அது திமுககாரர்களுக்கு பார்த்துப் பார்த்து கொடுத்து வருகிறார்கள். கொடுக்கப்படும் மானியத்திலும் கமிஷன் வாங்கிக்கொண்டு கொடுக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் இதுபற்றிய ஊழல் தோண்டி எடுக்கப்படும்.
பெருமாள் ஏரி அதிமுக ஆட்சியில் தூர்வார முறையாக டெண்டர் விடப்பட்டு பணி செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செய்யாத பணிக்கு பில் போட்டு பணத்தைக் கொள்ளையடித்தனர் என்ற தகவல் வருகிறது. அதுவும் விசாரிக்கப்படும். பெருமாள் ஏரியில் தூர் வாராமல் இருப்பது குறித்து காலையில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் குறிப்பிட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதை செய்து முடிப்போம்.
முந்திரி கொட்டைகளை கையால் உடைப்பதற்கு பதிலாக சிறிய எந்திரம் மானிய விலையில் கொடுக்கப்படும். பலாப்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும்போது பெரிய அளவில் விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள். அதை பதப்படுத்தி வைப்பதற்கு விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதுவும் அதிமுக ஆட்சி அமைந்ததும் செய்து கொடுக்கப்படும்.
மீனவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடந்துவரும் துறைமுக கட்டுமானப் பணி துரித கதியில் முடிக்கப்படும். திமுக காங்கிரஸ் ஆட்சியில் என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயன்றனர். அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக ஆட்சி. என்எல்சிக்கு விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தபடுவதற்கு இழப்பீட்டுத் தொகை போதவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். முன்பு மத்திய அரசிடம் போராடி ஜெயலலிதா பெற்றுக் கொடுத்தார். அதேபோல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அதையும் செய்து கொடுப்போம் என்று வாக்குறுதி தருகிறேன்.
உங்கள் பகுதி மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். உங்கள் பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டும் என்றால் ஒரு பொற்கால ஆட்சி வேண்டும். நானும் ஒரு விவசாயி. ஏழை மக்களின் கஷ்டத்தை உணர்ந்தவன். அடித்தட்டு மக்களின் எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய அரசு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு. 2026-ல் அதிமுக வெற்றி வாகை சூடும். திமுக கோட்டையை விட்டு ஓடும். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்" எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications