திமுக மா.செ.க்களுக்கு திடீர் அழைப்பு- கருணாநிதி தலைமையில் 8ம் தேதி முக்கிய ஆலோசனை!
சென்னை: தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், இம்மாதம் 8-ம் தேதி அக்கட்சியின் மாவட்டச் செயலர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இம்மாதம் 8-ம் தேதி காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து ஆலோசிக்கப்படும் இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆளும் கட்சியினரால் தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
உச்சகட்டமாக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல், கலவரத்தைத் தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கும் சென்னையில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுகிறது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.