சென்னையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்! மு.கஸ்டாலினுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாராட்டு!!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் வியூகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தலைச் சந்திப்பதற்கு திமுக கூட்டணி தயாராகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் திருச்சியில் மாநில மாநாடு நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் நேர்காணம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை டி.ஆர்.பாலு தலைமையிலான குழு மேற்கொண்டு வருகின்றது.

இதற்கிடையே திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஸ்டாலின் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியும், மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறைத் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசியும் ஒதுக்கீடு செய்யப் பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனும் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்பட்டது. அக்கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக அணியில் இருந்து இடதுசாரிகள் விலகி உள்ளனர். திமுக அணியில் இடதுசாரிகள் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மு.க. ஸ்டாலினுக்கு தங்க மோதிரம்
மேலும் திமுக தேர்தல் நிதி வசூலிப்பை ஒருங்கிணைத்த மு.க. ஸ்டாலினுக்கு கருணாநிதி தங்க மோதிரம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இதேபோல் அதிக தேர்தல் நிதி வசூலித்த மாவட்ட செயலர்களுக்கும் கருணாநிதி மோதிரம் அணிவித்து பாராட்டினார்.












Click it and Unblock the Notifications