எம்புட்டு செலவு செய்வீங்க? நேர்காணலில் 'நச்' சென்று கேட்ட திமுக, தேமுதிக
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் அனலடிக்கத் தொடங்கியுள்ளது. விருப்பமனு வாங்கிய கையோடு நேர்காணல் நடத்தி முடித்து வேட்பாளர் பட்டியலை ரெடி செய்து விட்டது பாட்டாளி மக்கள் கட்சி.
திராவிட முன்னேற்றக்கழகம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்பமனு பெறப்பட்டுள்ளது. இதில் கடந்த 20ம் தேதி முதல் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேர்காணலை நடத்தி வருகிறார்.
திமுகவும், தேமுதிகவும் இன்றைய தினம் நேர்காணலை தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் தேர்தலில் எவ்வளவு செய்வீர்கள் என்று முக்கிய கேள்வியாக கேட்டுள்ளனர் கட்சித்தலைவர்கள்.

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.கடந்த மாதம் 24ம்தேதி தொடங்கி இந்த மாதம் 10ம்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நேர்காணல் தொடங்கியது.தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர்காணல் நடத்தினார்கள்.

5 மாவட்டங்கள்
முதல்நாளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடத்த அழைக்கப்பட்டது. முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிக்கு மனு செய்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொருவராக அழைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிக்கும் 135 பேர் மனு செய்து இருந்தனர். கன்னியாகுமரிக்கு 27, நாகர்கோவிலுக்கு 26, குளச்சல் தொகுதிக்கு 25, பத்மநாபபுரத்துக்கு 28, விளவங்கோடுக்கு 15, கிள்ளியூர் தொகுதிக்கு 14 பேர் மனு கொடுத்து இருந்தனர். காலையில் அவர்களை ஒவ்வொருவராக அழைத்து நேர்காணல் நடத்தினர்.

204 பேரிடம் நேர்காணல்
பெரும்பாலான கேள்விகளை பொருளாளர் ஸ்டாலின் கேட்டதாக மனு தாக்கல் செய்தவர்கள் தெரிவித்தனர். பின்னர் மாலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்த 204 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது. அத்துடன் நேற்றைய நேர்காணல் முடித்து கொள்ளப்பட்டது.

எவ்ளோ செலவு செய்வீங்க?
தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, போட்டியிடுவோரின் பின்னணி, தேர்தலில் எவ்ளோ செலவு செய்வீர்கள் என்பன உள்பட பல கேட்கப்பட்டதாம். காங்கிரஸ் கூட்டணி பற்றியும் கேட்டுள்ளனர். அதற்கு பலரும், குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இருப்பதால் வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்று தெரிவித்தார்களாம்.

தேமுதிக நிலவரம்
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் மற்றும் மாவட்டச்செயலாளர்களிடம் பேசிவிட்டு முடிவை சொல்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். இந்த சூழலில், தேமுதிக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் இன்று தொடங்கியது.

கேள்வி கேட்ட விஜயகாந்த
நேர்காணலுக்கு வந்தவர்களிடம், யாருடன் கூட்டணி அமைக்கலாம்? உங்கள் தொகுதி மக்கள் எந்தக் கூட்டணியை விரும்புவார்கள்? தனித்து நின்றால் தேமுதிகவுக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும்? திமுக, அதிமுக பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? உங்கள் தொகுதியில் வேறு ஒருவரை நிறுத்தினால் எப்படி வேலை செய்வீர்கள்? தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்று விஜயகாந்த் கேட்டுள்ளார்.

தலைவர் சொன்னா சரிதான்
இதற்கு பெரும்பாலானவர்களும், தலைவர் முடிவுக்குக் கட்டுப்படுவதாக கூறியுள்ளனராம். சிலரோ திமுக உடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், சிலர் தனித்து போட்டியிடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 2க்கு பிறகு முடிவு
தேமுதிக வேட்பாளர் நேர்காணல் இன்று தொடங்கி வரும் 1ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதையடுத்து மார்ச் 2ம் தேதி நடக்கவுள்ள தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் விஜயகாந்த் கருத்து கேட்கவுள்ளார். இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகே கூட்டணி பற்றிய முழுமையான அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

ஜி.கே.வாசன் நிலை
தமாகா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 10 முதல் 12ம் தேதி வரை மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 234 தொகுதிகளுக்கும் 4 ஆயிரத்து 886 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். கடந்த 20ம் தேதி முதல் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேர்காணல் நடத்தி வருகிறார்.

கூட்டணி
செவ்வாய்கிழமையன்று திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், கரூர், மாலையில் அரியலூர், பெரம் பலூர், தஞ்சை, நாகை, திரு வாரூர், சென்னை என மாவட்ட வாரியாக நேர்காணல் நடை பெறும். இதன்பின்னரே யாருடன் கூட்டணி என்று அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளார் வாசன்.

தலைவர் முடிவு
தமாகா நேர்காணலில் பங்கேற்றவர்களும், தலைவரின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக கூறியுள்ளனர். சிலரோ தமாகா தலைமையில் அணி அமைக்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஜி.கே.வாசன் என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ?

அதிமுக நேர்காணல் எப்போ?
ஆளுக்கு முதலாக விருப்பமனு வாங்கிய சைலண்டாக வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது? இன்னும் சில தினங்களில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்றும் போயஸ்கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications