ஏற்காடு இடைத்தேர்தல்: முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்தது திமுக-வெ.மாறன் போட்டி
சென்னை: ஏற்காடு சட்டபைத் தொகுதி இடைத் தேர்தலி்ல் திமுக சார்பி்ல் வெ.மாறன் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
ஏற்காடு அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதில், திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இன்று காலையில் விருப்ப மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.மொத்தம் 8 பெண்கள் உள்பட 43 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு வரையும் அழைத்து கருணாநிதி நேர்காணல் நடத்தினார்.

இதில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 10.45 மணிக்கு நேர்காணல் தொடங்கியது.மதியம் 1 மணி வரை நடந்த நேர்காணலின்போது, அதில் பங்கேற்றவர்களிடம் அவர் கட்சியில் வசிக்கும் பதவி, ஆற்றிய பணிகள், வெற்றி வாய்ப்புக்கான காரணம், தேர்தல் செலவுக்கான வசதி ஆகியவை குறித்து கேட்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளராக வெ.மாறன் போட்டியிடுவார் என்று கருணாநிதி அறிவித்தார்.
மாறன் எம்.பி.ஏ. பட்டதாரி. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகியாக இருந்து வருகிறார். வேட்பாளர் பெயரை அறிவித்ததும் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு மாறன் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
முதல் வேட்பாளர் திமுகவிடமிருந்து
ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளராக திமுகவின் மாறன் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற கட்சிகள் குறிப்பாக ஆளுங்கட்சியான அதிமுக இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்காத நிலையில் திமுக முந்திக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications