அதிருப்தியாளர்களை போனில் கூப்பிட்டு சமாதானப்படுத்தும் ஸ்டாலின்! திக்குமுக்காடும் திமுகவினர்!!
திமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களை போனில் அழைத்து ஸ்டாலின் சமாதானப்படுத்தும் விதமாக பேசுவதால் திமுகவினர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி வருகின்றனர்.
சென்னை: திமுகவின் செயல் தலைவராகிவிட்ட மு.க.ஸ்டாலின் கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறாராம். ஸ்டாலினே போனில் அழைத்து பேசுவதால் அதிருப்தியில் இருந்த திமுகவினர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகின்றனராம்.
திமுகவில் ஸ்டாலின் ஆதிக்கம் ஓங்க தொடங்கியதில் இருந்தே கணிசமான அதிருப்தியாளர்களும் வளரத் தொடங்கினர். ஒருவரை வளர்த்துவிடுவதற்காக உண்மையான கட்சி விசுவாசியை ஓரம் கட்டும் பாணி திமுகவில் நீண்டகாலமாக நடந்து வருகிறது.

அதிரடி புறக்கணிப்பு
இருந்தபோதும் கட்சி, கொள்கை என்பதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு திமுகவில் தொடருகிறவர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்றும் இருக்கின்றனர். ஸ்டாலின் பொதுவாக ஓரம்கட்டிவிட்டால் அவர்களைத் திரும்பிக் கூட பார்க்காமல் தொடர்ந்து புறக்கணித்துவிடுவாராம்.

திக்குமுக்காடும் திமுகவினர்
ஆனால் திமுகவின் செயல் தலைவரான பிறகு அவருக்கு பலரும் சொன்ன அறிவுரையே, அதிருப்தியில் இருப்பவர்களை சமாதானப்படுத்துங்கள் என்பதுதானாம். இதனால் தம்மால் ஓரம்கட்டப்பட்டவர்கள், ஒதுக்கி வைக்கப்பட்ட பலரையும் ஸ்டாலினே போனில் கூப்பிட்டு பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம் ஸ்டாலின். இந்த அதிரடியால் திமுகவினர் திக்குமுக்காடி வருகின்றனராம்.

எதிர்பார்ப்பு
அத்துடன் பேனர் வைக்க வேண்டாம், காலில் விழ வேண்டாம், சமத்துவ ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஸ்டாலின் முதிர்ச்சியுடன் கூறிவருகிறார். இது பல திமுக அதிருப்தியாளர்களை 'நம்பிக்கை வைப்போம்' 'காத்திருப்போம்' 'இன்னும் மாற்றம் வரும்' என எதிர்பார்க்கவும் வைத்துள்ளதாம்.

சளைக்காத கருணாநிதி குடும்ப உறுப்பினர்
அதேநேரத்தில் அதிருப்தியாளர்களை 'துண்டு தலைவரின்' தூண்டுதலில் வளைக்கும் முயற்சியில் கருணாநிதி குடும்பத்து உறுப்பினரும் தீவிரமாக இறங்கி போன் போட்டு பேசி வருகிறாராம். அவருக்கு என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்திலும் சில திமுக நிர்வாகிகள் இருந்து வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications